ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின்சாரம் வழங்க முடியாது.. ஹைகோர்ட் கிளை அதிரடி!
ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின்சாரம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின்சாரம் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து அரசு அமைத்த உயர்மட்ட நிபுணர்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து அமிலங்களையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தற்காலிக மின் இணைப்பு வழங்க கோரியும் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்மட்ட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அனைத்து அமிலங்களையும் அகற்றும்பணி நடக்கிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சில அமிலங்களை 90 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனை ஏற்ற உயர்நீதிமன்ற கிளை, உயர்மட்ட நிபுணர் குழு அனைத்து பணிகளையும் முறையாக மேற்கொள்வதாக கூறி மின்சாரம் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு வேதாந்தா குழும வழக்கை முடித்து வைத்துள்ளது.