திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள், பக்தர்களை ஏமாற்றி பணம் பறிக்க கூடாது: ஹைகோர்ட்
Recommended Video
மதுரை: திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பூஜை என்ற பெயரில் பொய்யாக ஏமாற்றி பணம் பறிக்க கூடாது என்று ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறிப்பதாகவும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாகவும், கோவில் ஊழியர்கள் வருகை பதிவேடை கண்காணிக்க பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும், ராஜபாளையத்தை சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, நீதிபதிகள் கூறியதாவது:
திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர்கள், ஏழை, பணக்காரர் என பாகுபாடின்றி ஒரே விதமாக அனைத்து பக்தர்களையும் நடத்த வேண்டும். கோவில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் சிறப்பு பூஜை என்ற பெயரில் பொய்யாக ஏமாற்றி பணம் பறிக்க கூடாது.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட அர்ச்சகர்களை பக்தர்கள் இனம் காண வசதியாக அறிவிப்பு பலகை வசதி செய்து தர வேண்டும். வருகை பதிவேட்டை கண்காணிக்க அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் நடைமுறை கொண்டுவரப்பட வேண்டும். அர்ச்சகர்கள் நடவடிக்கை பற்றி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒருமுறை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும்.
நீதிமன்ற உத்தரவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இந்து சமய அறநிலையத்துறை, திருச்செந்தூர் கோவில் ஆணையர் இன்னும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.