அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகளை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்!
சென்னை: அத்திக்கடவு - அவினாசி திட்டப்பணிகள் நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி கோவையை சேர்ந்த ஒத்தசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு திட்டத்தை விரைவுபடுத்தி அது தொடர்பான விவரங்களை தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் தலைமை பொறியாளர் தினகரன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து அனுமதி பெறவே 17 மாதங்கள் தேவைப்படும் என்றும் பணிகளை முழுமையாக முடிக்க 15 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே திட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு நீதிமன்றம் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் அமர்வு வழக்கை டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் தமிழக அரசு பட்டியலிட்டப்படி பணிகள் நடைபெறுகிறதா என்பதை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.