வாலிபர் கொலை வழக்கு.. தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவிற்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: சதீஷ்குமார் என்பவர் மரணம் தொடர்பான வழக்கில் விளையாட்டு வீரர் மாரியப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜூன் 3-ஆம் தேதி மாரியப்பன் தனது நண்பருடன் புதிதாக வாங்கப்பட்ட காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் ஓமலூரை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரின் பைக் மாரியப்பனின் கார் மீது மோதியது.
காரில் லேசாக கீறல் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது மாரியப்பனுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறிது நாள்களுக்கு பிறகு ரயில் தண்டவாளம் அருகே சதீஷ்குமார் இறந்து கிடந்தார்.
கார் சேதமானதற்கு மாரியப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிறகே தனது மகன் இறந்துள்ளதால் மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தாய் முனியம்மாள் காவல் துறையில் புகார் தெரிவித்தார். எனினும் மாரியப்பன் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் சதீஷ்குமார் மர்ம மரண வழக்கில் மாரியப்பனின் பெயர் சேர்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மரண வழக்கில் மாரியப்பனின் பெயரை சேர்க்குமாறு காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் இந்த வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.
மாரியப்பன் தங்கவேலுவை, வழக்கின் எதிர் மனுதாரராக சேர்த்த ஹைகோர்ட், நவம்பர் 11க்குள் மாரியப்பன் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.