கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.. மதுரை ஹைகோர்ட் அதிரடி
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கலாம் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: தனியார் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பது உறுதியானால், அரசு அந்த பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜூ என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் மத்திய அரசு பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்தும் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் 25 சதவிகித மாணவர்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவசக் கல்வி அளிக்க வேண்டும். இதன் மூலம் எஸ்சி, எஸ்டி பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் படிக்கலாம்.
ஆனால், பல தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, சேர்ந்து படிப்பவர்களிடம் கல்விக் கட்டணம் மற்றும் சீருடைக் கட்டனம் , புத்தகக் கட்டணம் என்று பல்வேறு வகைகளில் தனியார் பள்ளிகள் கட்டணங்களை வசூலித்து வருகின்றனர் என்று செய்தி வெளியானது. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்த திட்டத்துக்காக மத்திய மாநில அரசுகள் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷா பானு அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்.
விசாரணையில் தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உண்மையெனில் அந்த பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் 6 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.