அரசுப் பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்த தமிழக அரசு முடிவெடுக்க கெடு– ஹைகோர்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி கதவுகளைப் பொருத்துவது பற்றி முடிவெடுக்க அரசிற்கு ஒரு மாத கால கெடு விதித்துள்ளது ஹைகோர்ட்.
மேலும், பேருந்துகளில் தானியங்கிக் கதவுகளைப் பொருத்துதல் விபத்துகளைத் தடுப்பதற்கான முக்கிய வழிமுறை என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னை ஹைகோர்ட்டில், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு தொழிற்சங்கத்தின் தலைவர் எம்.அன்புராஜ் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார்.
படிக்கட்டுகளில் பயணம்:
அதில், "தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கதவுகள் பொருத்தாமல் இயக்கப்படுவதால் மாணவர்கள், பொதுமக்கள் படிக்கட்டில் நின்று பயணம் செய்கின்றனர். இதனால் பயணிகள் மட்டுமல்லாமல பேருந்துகளின் நடத்துனர் கூட கீழே தவறி விழுந்து மரணமடைகின்றனர்.
2010இல் வழக்கு:
கடந்த ஆண்டு ஒரு அரசு பேருந்துடன் லாரி மோதியபோது, படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் தவறி விழுந்து பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்பை தவிர்க்க அனைத்து பேருந்துகளிலும் கதவுகள் பொருத்தும்படி அரசுக்கு உத்தரவிடக்கோரி 2010 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
நடவடிக்கை இல்லை:
இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், போக்குவரத்து துறை அதிகாரியிடம் மனு கொடுக்கும்படி உத்தரவிட்டது. மனு கொடுத்தும் போக்குவரத்து துறை அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
தானியங்கி கதவுகள்:
எனவே அனைத்து அரசு பேருந்துகளிலும், ஓட்டுனர் இயக்கும் விதமாக தானியங்கி கதவுகளை பொறுத்தும்படி தமிழக போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
செயல்பாடு சரியாக இல்லை:
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கின் தீர்ப்பின்படி, "அரசு பேருந்துகளில் தானியங்கி அல்லது சாதாரண கதவுகள் பொருத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், இந்த 2 வகையான கதவுகளும் பலநேரங்களில் செயல்படாமல் தான் உள்ளது.
பராமரிப்பு இல்லை:
ஒருபுறம் பேருந்துகள் சுத்தமாகவும், சரியான பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. மறுபுறம் அந்த பஸ்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியிலும் இல்லை.
உண்மைநிலை வெளிச்சம்:
பேருந்துகளில் கதவுகள் இல்லாததால், படிக்கட்டு பயணத்தை மேற்கொள்பவர்களில் சிலர் பலியாவதாக மனுதாரர் கூறுகிறார். அவர் அரசு பேருந்து ஓட்டுனர் என்பதால், இதுபோன்ற பிரச்சினையில் உண்மைநிலை அவருக்கு தெரிந்து இருக்கும்.
ஒரு மாதத்திற்குள் கொள்கை முடிவு:
பேருந்துகளில் பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை போக்குவரத்து துறை செய்து தரவேண்டும். எனவே, பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் கொள்கை முடிவு எடுக்க வேண்டும்" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.