ராம்குமார் உடலை செப்.30-ம் தேதி வரை பாதுகாக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ராம்குமார் உடலை செப்டம்பர் 30-ம் தேதி வரை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை அனுமதிக்க வேண்டும் என்று ராம்குமார் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வந்தபோது, இருவரும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதி என்.கிருபாகரன், 'பிரேத பரிசோதனை செய்யும்போது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் அதில் இடம் பெறவேண்டும்' என்று உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, 3 நீதிபதிகள் 3 விதமான தீர்ப்புகளை பிறப்பித்துள்ளதாக கூறி, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணை நடத்த வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் பரமசிவத்தின் வழக்கறிஞர் முறையிட்டார். ஆனால், அந்த கோரிக்கையை தலைமை நீதிபதி ஏற்கவில்லை.
இதன் பின்னர் பரமசிவனின் வழக்கறிஞர் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு ஆஜராகி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதனால், நேற்று (முன்தினம்) நீங்கள் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்கவேண்டும். ராம்குமார் உடலை 30-ந் தேதி வரை பதப்படுத்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிடவேண்டும்' என்றார்.
இதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன், 'டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பல உண்மைகளை வெளியில் கொண்டு வந்தவர்கள். இப்போது இறந்தவர் (ராம்குமாரின்) உடலின் கண்ணியத்தை காக்கவேண்டும். ஆனால், இந்த பிரச்சினையில் அரசியல் கட்சிகள் ஏன் தலையிட வேண்டும்? இது துரதிர்ஷ்டவசமானது' என்று கருத்து தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய சட்டரீதியான உரிமை உள்ளது. எனவே, ராம்குமாரின் உடலை வருகிற 30-ந் தேதி வரை பதப்படுத்தி வைக்கவேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிடுகிறேன் என்று கூறினார்.