வீரப்பன் நினைவு தினம்... அன்னதானம் நடத்த, பேனர் வைக்க மனைவி முத்துலட்சுமிக்கு அனுமதி
சென்னை: வீரப்பனின் நினைவு தினத்தை முன்னிட்டு மேட்டூரில் அன்னதான நிகழ்ச்சி நடத்த அவரது மனைவி முத்துலட்சுமிக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
சந்தன மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் வீரப்பன். இவர் கடந்த 2004ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வீரப்பனின் 11ம் ஆண்டு நினைவு நாள் வருகிற 18ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. அதை முன்னிட்டு வீரப்பன் சமாதி உள்ள மேட்டூரில் அன்னதானம் நிகழ்ச்சி நடத்தவும், அதற்காக வீரப்பனின் உருவபடம் கொண்ட ‘கட்-அவுட்' வைக்கவும் அனுமதி கேட்டு சேலம் மாவட்ட போலீசில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மனு அளித்தார். ஆனால், அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து சென்னை ஹைகோர்ட்டில் முத்துலட்சுமி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், தனது அன்னதான நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘மனுதாரர் தன் கணவரின் நினைவு நாளை முன்னிட்டு, அன்னதானம் செய்யவும், அதுதொடர்பான ‘பேனர்களை' நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மட்டும் வைக்கவும் போலீசார் அனுமதிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரர் அன்னதானம் நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால், அவருக்கு வழங்கப்படும் அனுமதியினை ரத்து செய்து, சட்டப்படி நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் அவர் தெரிவித்துள்ளார்.