செங்கத்தில் அப்பா, மகனை கொடூரமாக தாக்கிய போலீஸ்..பொதுநல வழக்காக ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு
சென்னை: செங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை காவலர்கள் தாக்கியது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை தலைமை காவலர்கள் 3 பேர் நடுரோட்டில் கண்மூடித்தனமாக தாக்கிய காட்சிகள் வாட்ஸ் அப்பிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான செய்தியை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி முறையீடு செய்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தலைமை நீதிபதி அமர்வு, பாதிக்கப்பட்டவர்களை தவிர மற்றவர்கள் பொதுநலன் என்ற பெயரில் முறையீடு செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார். மேலும் இந்த வழக்கை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி நேரடியாக தொடரலாம் எனவும் கூறினார்.
அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், முறையீடு என்ற பெயரில் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்படுகிறது. பட்டியல் இடப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுவதில்லை கூறினார். அதற்கு பதில் அளித்த ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சமூகத்தில் சட்ட விரோத சம்பவங்கள் நடைபெறும்போது அதனை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டுவருவது தங்கள் கடமை என்றும், அதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.