சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிரான பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தள்ளுபடி: ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: சென்னை-சேலம் நடுவேயான 8 வழிச்சாலைக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை - சேலம் இடையே 277 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் ரூ.10,000 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு 8 வழிச் சாலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் சாலைக்கான நிலங்கள், '2013ஆம் ஆண்டின் நில கையகப்படுத்தப்படும் சட்டத்தின் 105வது பிரிவின்' கீழ் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத்தொடுத்தனர். அதில் 2013ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அரசியல் சாசனத்திற்கே முரணானது என்றும், அந்தப் பிரிவின் கீழ் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தக்கூடாது. அதற்குத் தடை விதிக்க வேண்டுமெனக் கோரியிருந்தது.
அறிவிப்பாணை
தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 - படி நிலம் கையகப்படுத்தல் தொடர்பான அறிவிப்பானை அரசிதழில் வெளியான 21 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சேபனையை தெரிவிக்கலாம். ஆனால், இச்சட்டத்தின்கீழ் பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தும் அவசியம் இல்லை என்றுள்ளது.
சட்டம் சொல்வது என்ன?
2013ம் ஆண்டு சட்டத்தில் உள்ள பிரிவு 105-ன் படி, இந்த சட்டத்தின் அம்சங்கள் 13 பிற சட்டங்களுக்குப் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அந்த 13 சட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 சட்டமும் ஒன்றாகும். இதனால் சமூக பொருளாதார தாக்க ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என ஆகிறது.
மனு தள்ளுபடி
எனவே சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இன்று இந்த வழக்கில் 105வது பிரிவு குறித்து மட்டும் விசாரித்த நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, அந்தச் சட்டப்பிரிவு அரசியல் சாஸனத்திற்கு முரணானது அல்ல என்றுகூறி வழக்கைத் தள்ளுபடிசெய்வதாக அறிவித்தனர்.
தடை கோரும் வழக்குகள்
அதே நேரம், சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்திற்கு தடை கோரும் வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சட்டப்பிரிவு தொடர்பான சந்தேகங்களுக்கான தீர்ப்பாகதான் இதை பார்க்க வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.