என்ன நடக்கிறது தமிழகத்தில்.. நாள் முழுக்க அடுத்தடுத்து நடந்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் காலை முதல் மாலை வரை அடுத்தடுத்து அரசியல் சார்பான நிகழ்வுகள் பலவும் அரங்கேறி பரபரப்பை கூட்டியுள்ளன.
இன்று காலை திடீரென மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென ஆளுநர் மாளிகை சென்றார்.
ஆளுநர் மாளிகையில் அவர், ஆளுநர், பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசித்தார்.
ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
இந்த சந்திப்புகள் நிகழ்ந்த சில நிமிடங்கள் கழித்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், முதல்வர் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை ராஜ்பவனில் வைத்து சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், எதற்காக இந்த சந்திப்பு என்பது தெரிவிக்கப்படவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வருடன் சந்தித்தது, பிறகு ஆளுநரை சந்தித்ததையடுத்து, முதல்வரும் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளது ஏன் என்று தெரியவில்லை.
பிரதமருடனும் சந்திப்பு
இந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு தகவலும் வெளியானது. அந்த தகவல் இதுதான்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்பதுதான் அந்த தகவல். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பது தொடர்பாக மோடியிடம் எடப்பாடி பேசுவார் என்று தகவல்கள் கூறப்பட்டாலும், அடுத்தடுத்து ஏன் இந்த முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன என்ற கேள்வியும் எழுகிறது.
தினகரன் தரப்பு
இதெல்லாம் ஆளும் தரப்பில் நடந்த நிகழ்வுகள் என்றால், டிடிவி தினகரன் இன்று தனது வீட்டில் பேட்டியளித்தபோது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற கோரியதாக தெரிவித்தார். மறுபக்கம் அமைச்சர் தங்கமணி, தினகரன்தான், அதிமுகவுடன் இணைய தூதுவிட்டார் என்று பதிலடியாக தெரிவித்தார்.
என்ன காரணம்
அடுத்ததாக டிடிவி தினகரன் திடீரென, பெங்களூரிலுள்ள சசிகலாவை சந்திக்க கிளம்பி சென்றுவிட்டார். மாலை 6.30 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இரவு, ஆளுநருடன் முதல்வர் திடீரென சந்திக்க உள்ளதற்கான காரணம், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெளியாகும் தீர்ப்பு தொடர்பானதா, பன்னீர்செல்வம் தொடர்பாக தினகரன் தரப்பினர் வெளியிட்டு வரும் தகவல் காரணமாகவா, கருணாஸ் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான புதிய நடவடிக்கை தொடர்பானதா, என்பதெல்லாம் யூகங்களாக றெக்கை கட்டி பரவி வருகிறது. காலை முதல் தொடரும் இந்த பரபரப்பு மாற்றங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன.