ஓகி புயல் தாக்கம்: கன்னியாகுமரி ரயில் சேவைகள் மாற்றியமைப்பு
கன்னியாகுமரியில் கனமழையால் ரயில் சேவையில் மாற்றம் குறித்த அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது.
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகொ புயலால் பெய்து வரும் கடுமையான மழை மற்றும் காற்றால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
மரங்கள் முறிந்து ரயில் பாதைகளில் விழுந்துள்ளதாலும், மழை நீரில் இருப்புப் பாதைகள் பல இடங்களில் முழ்கி இருப்பதாலும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் - திருவனந்தபுரம், நாகர்கோவில் - கன்னியாகுமரி ஆகிய மார்க்கங்கள் இடையே பல ரயில்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. மீட்புப் படையினர் மற்றும் ரயில்வே பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் டிசம்பர் 2ம் தேதி வரை ரத்து செய்யப்பட்ட, பயண நேரம் மாற்றப்பட்ட ரயில் சேவைகள் குறித்து அட்டவணை வெளியிட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட ரயில்கள் :
டிசம்பர் 1ம் தேதி நாகர்கோவில் - திருவனந்தபுரம், கோட்டயம் - எர்ணாகுளம், எர்ணாகுளம் - நிலாம்பூர் ஆகிய பாசன்ஞ்சர் ரயில்களும், புனலூர் - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
டிசம்பர் 2ம் தேதி கோட்டயம் - கொல்லம், கொல்லம் - புனலூர், கொல்லம் - திருவனந்தபுரம் திருவனந்தபுரம் - நாகர்கோவில், புனலூர் - கன்னியாகுமரி மார்க்கங்களில் ஓடும் பாசன்ஞ்சர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
டிசம்பர் 1ம் தேதி நாகர்கோவில் - மங்கலூர் செல்லும் எர்நாடு எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து கொல்லம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல ரயில்களின் பயண நேரம் மாற்றியமைக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்து உள்ளது.