நீதி கேட்டு வலுக்கும் போராட்டம்.. தலைமைச் செயலக சாலையில் போலீஸ் கெடுபிடி... தீவிர வாகன பரிசோதனை!
அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்களோ என்ற அச்சத்தில் அதன் இணைப்பு சாலை முதல் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டத்தால் தலைமைச் செயலக இணைப்பு சாலையில் போலீசாரின் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அனிதா மரணமடைந்த நாள் முதலே மெரினாவில் போராட்டக்காரர்கள் ஒன்று கூடக் கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை தலைமைச் செயலகம் செல்லும் காமராஜர் சாலையில் வானங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுப் போக்குவரத்து சேவையான மாநகர பேருந்தில் இருந்து வந்து போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மெரினாவிழியாக பாரிமுனைக்க செல்லும் பேருந்துகள் தடம் மாற்றி விடப்பட்டுள்ளன. மெரினா கடற்கரையைத் தாண்டி போர் நினைவிடத்தில் பேரிகார்ட் அமைத்த சோதனை செய்யப்படுகின்றன. மாநகரப் பேருந்துகள் பாரிமுனைக்கு மாற்று வழியில் அனுப்பப்படுகின்றன.
தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கி, துறைமுக அலுவலகத்திற்கு செல்ல விரும்புவோர் தீவிர சோதனைக்குப் பிறகு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. நீட் விவகாரத்தில் மக்கள் போராட்டம் நடத்தக் கூடும் என்று வந்த எச்சரிக்கையையடுத்து போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.