பள்ளி ஆசிரியைகள் இனி “ஓவர் கோட்” அணிதல் கட்டாயம்- மதுரை பள்ளியில் தொடக்கம்!
மதுரை: தமிழக பள்ளிகளில் மாணவர்களின் கேலி கிண்டல்களில் இருந்து தப்பிக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு யூனிபார்ம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
பருவ வயதை எட்டும் மாணவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்துள்ளன. மேலும் 18 வயது பூர்த்தி அடையாத பிளஸ் 2 மாணவர்கள் ஆசிரியைகளை கேலி கிண்டல் செய்யும் சம்பவங்களாலும் கல்வித் துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இதையடுத்து ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து ஏப்ரலில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
அரசு அனுமதிக்கு வெயிட்டிங்:
இதில் பல பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பி அனுமதிக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆசிரியைகளை மாணவர்கள் மற்றும் சமூக விரோதிகள் கேலி, கிண்டல் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
பெற்றோரிடம் அறிவுருத்தல்:
இதுகுறித்து மதுரை மாவட்ட போலீசார் விசாரித்து மாணவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுறுத்தினர். மேலும் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வர அறிவுறுத்தினர்.
கோட் போடனும் இனி:
இதன்படி சில மாணவர்களின் தவறான செய்கை மற்றும் பார்வைகளில் இருந்து தப்பிக்க ஆசிரியைகளுக்கு மட்டும் சேலையுடன் "மேல் கோட்" என்ற மேலங்கி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
திட்டம் அறிமுகம்:
மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஏஞ்சலோ இருதயசாமி உத்தரவுப்படி மதுரை பேரையூர் தாலுகா வன்னிவேலன் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
பள்ளிக்குள் கோட் கட்டாயம்:
"பள்ளிக்குள் இனி கண்டிப்பாக மேல்கோட் அணிய வேண்டும்" என ஆசிரியைகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். "மற்ற மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ஒப்புதல் பெற்றபின் இந்த உடை கட்டுப்பாட்டை அமல்படுத்தலாம்" எனக் கூறப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சில பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே பெண் பேராசிரியைகளுக்கு கோட் அணிதல் கட்டாயமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.