பாக். பள்ளித் தாக்குதல் எதிரொலி: தமிழக பள்ளிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: பாகிஸ்தான் ராணுவ பள்ளி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 141 பேர் படுகொலை செய்யப்பட்டதின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தி வரும் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் 6 பேர், அங்கிருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில், அப்பள்ளிக்கூட மாணவர்கள் 132 பேர் உட்பட 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்துள்ள தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை மாநில உளவுத்துறைக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநில போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தை பொருத்தவரை போலீஸ் டிஜிபி அசோக்குமார் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களும் பாதுகாப்பு பணியை நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னையை பொருத்தவரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களான வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரயில்-பஸ்-விமான நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பள்ளி, கல்லூரிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.