தாமிரபரணி நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தர தடை கோரிய மனு தள்ளுபடி
தாமிரபரணி நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தர தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: தாமிரபரணி ஆற்று நீரை குளிர்பான நிறுவனங்களுக்கு தர தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து பெப்சி, கோக் நிறுவனங்கள் எடுக்கும் தண்ணீரால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் ஆகியவை பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சிப்காட்டில் இருக்கும் 25 தனியார் நிறுவனங்களுக்கு நீர் வழங்க தடைகோரி நெல்லையை சேர்ந்த ராகவன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆற்றிலிருந்து தினமும் 48.66 லட்சம் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்கு நீர் தருவதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என மனுதாரர் அம்மனுவில் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டே நீர் தருவது நிறுத்தப்பட்டு விட்டதாகவும், அதன் பிறகு 50 சதவீத நீரே வழங்கப்படுவதாகவும் சிப்காட் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் வறட்சியால் தண்ணீர் தற்போது 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படுவதாக சிப்காட் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
சிப்காட் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் ராகவன் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.