சட்டசபை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு… கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆய்வு
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. இதனால் சட்டசபை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: 29 ஆண்டுகளுக்கு பின்னர், தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்துள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இன்று சட்டசபையில் 11 மணிக்கு என்ன நடக்கும் என்ற பதற்றம் எல்லோரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் பாதுகாப்பு அளிக்கவும் தலைமை செயலகத்தைச் சுற்றி சுமார் 1600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் 10 வாயில்களில் உள்ளன. அவை அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது கார் ஓட்டுனர் மட்டுமே கோட்டைக்குள் வர அனுமதி அளிக்கப்படுகிறது.
சட்டசபைக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து சென்னை கமிஷனர் ஜார்ஜ் நேரில் பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.