டாஸ்மாக் கடையை திறந்தே தீரணும்… நெடுஞ்சாலைகளை நகராட்சிகள் எடுத்துக் கொள்ளுங்கள்.. அரசின் அவசர ஆணை
தேசிய நெடுஞ்சாலைகளை நகராட்சிகள் எடுத்துக் கொண்டு அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசு முயற்சி செய்து வருகிறது.
சென்னை: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் 500 மீட்டர் சுற்றளவிலும் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பார்களும் ஏப்ரல் 1-ந் தேதியுடன் மூடப்பட்டன.
சென்னை அண்ணாசாலையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் புகழ்பெற்ற நட்சத்திர விடுதிகள், கிளப்புகள் ஆகியவற்றில் செயல்பட்டு வந்த பார்களும் மூடப்பட்டன.
இதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை நகராட்சிக்களுக்கு உட்பட்ட சாலைகளாக மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
கடிதம்
இதுதொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
செலவுகளை குறைக்க…
அந்தக் கடிதத்தில் மத்திய மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று பல்வேறு பணிகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளை விரைந்து நடைமுறைப்படுத்தி செலவுகளை குறைக்க வேண்டிய சூழல் உள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாலை மாற்றம்
இந்தத் துறைகளுக்கு செலுத்த வேண்டிய செலவினங்கள் மற்றும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மாநிலத்தின் முக்கிய சாலைகள், ஊராட்சி சாலைகள் மற்றும் இதர மாவட்ட சாலைகளை மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் வசம் எடுத்துக் கொள்ள மன்றத் தீர்மானம் நிறைவேற்றுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
25ம் தேதிக்குள்
இந்தத் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றி வரும் 25ம் தேதிக்குள் நகராட்சி நிர்வாக அலுவலகத்திற்கு தனிநபர் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
பெண்கள் கொதிப்பு
டாஸ்மாக் கடைகளை திறந்தே தீர வேண்டும் என்ற முனைப்போடு தமிழக அரசு நெடுஞ்சாலைகளை நகராட்சி சாலைகளாக மாற்றும் செயலுக்கு தமிழக பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுவிற்கு எதிராக கடும் போராட்டங்களை மேற்கொண்டு வரும் பெண்கள், இன்னும் அதிக அளவில் ஆர்ப்பாட்டங்களை செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.