தமிழ் வானொலிகளில் இந்தி மொழி ஆதிக்கம் அதிகரித்துள்ளது தடுக்கப்பட வேண்டும் : ராமதாஸ் அறிக்கை
தமிழ் வானொலிகளில் இந்தி மொழி ஆதிக்கம் அதிகரித்துள்ளது தடுக்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ் வானொலிகளில் ஒளிபரப்பப்படும் இந்தி நிகழ்ச்சிகள் மூலம் இந்தி மொழியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலம் ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் இந்தி மொழி நிகழ்ச்சிகளின் அளவு அண்மைக்காலங்களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் திட்டமிட்டும், அப்பட்டமாகவும் குறைக்கப்பட்டு வருகின்றன. இது கண்டிக்கத்தக்கதாகும்.
சாலைகளில் செல்பவர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் உள்ள பொருட்களைப் பறித்துச் செல்வதைப் போன்று, தமிழ்நாட்டு மக்களை எந்தநேரமும் பரபரப்பாகவும், பதற்றமாகவும் இருக்கும் சூழலுக்கு ஆளாக்கி விட்டு, அவர்கள் கவனம் முழுவதும் அதில் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு இந்தியைத் திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள சென்னை, திருச்சி, தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்பது கிட்டத்தட்ட இந்திமயமாக்கப்பட்டு விட்டது. வர்த்தக ஒலிபரப்பில் காலை முதல் மாலை வரை பெரும்பாலும் இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பப்படுகின்றன.
உள்ளூர் நிகழ்ச்சித் தயாரிப்புகள் படிப்படியாக குறைக்கப்பட்டு, டெல்லி நிகழ்ச்சிகள் மறு ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்ட நேரம் போக மீதமுள்ள நேரத்தில் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டாலும் கூட அவற்றில் இந்தி விளம்பரங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.
26.10.2014 ஞாயிற்றுக் கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று சென்னை வானொலி நிலைய கூடுதல் தலைமை இயக்குனர் ஆணையிட்டார். இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் இதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாகவும் 24.10.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்தேன். இதைத் தொடர்ந்து இந்தித் திணிப்பை கைவிட்டிருந்த மத்திய அரசு இப்போது மீண்டும் திணிக்கத் தொடங்கியுள்ளது.
ஜனநாயகத்தின் அடிப்படையே மக்களின் விருப்பத்திலும், உரிமைகளிலும் குறுக்கீடு செய்யாமலிருப்பது தான். ஆனால், ஜனநாயகத்தை மதிக்காமல் தமிழ் நாட்டில் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் இந்தியைத் திணிப்பதை அனுமதிக்க முடியாது.
இதைக் கைவிட்டு தமிழகத்திலுள்ள வானொலி நிலையங்களின் மூலம் தரமான தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப மத்திய அரசும், பிரசார் பாரதியும் முன்வர வேண்டும் என்று ராமதாஸ் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.