இந்தியைத் திணித்தால் மக்களிடையே கொந்தளிப்பு உண்டாகும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை
சென்னை: இந்தி பேசாத மக்களிடையே திணித்தால் பெரும் கொந்தளிப்பு உருவாகும் என்று தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மத்திய அரசு ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும் என்று பேசியிருப்பது இந்தி பேசாத மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கியிருக்கிறது.
இந்தி மொழிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காமல் சில அறிவுஜீவிகள் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய பேச்சின் மூலம் இந்தி பேசாத மக்களுக்கு பண்டித நேரு வழங்கிய உறுதிமொழியை உதாசீனப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியோடு ஆங்கிலமும் தொடர்ந்து நீடிக்கும் என்கிற நேருவின் உறுதிமொழிக்கு மாறாக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால் இந்தி பேசாத மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.