அவர் ஸ்கூட்டரை அவரே எரித்து விட்டு டிராமா போட்ட "இந்து அதிரடிப்படை" ராஜகுரு..!
ஈரோடு: தன்னை ஒரு கும்பல் கொலை செய்யத் துரத்தியதாகவும், தனது ஸ்கூட்டரை தீவைத்து எரித்து விட்டதாகவும் கூறி டிராமா போட்ட இந்து அமைப்பின் நிர்வாகியைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபர் தனது ஸ்கூட்டரை எரித்து விட்டுகிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கும் மேலாக அதை நின்று நிதானமாக வேடிக்கை பார்த்ததாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
பப்ளிசிட்டி தேடிக் கிளம்பி விட்டனர் சில இந்து அமைப்புகளின் நிர்வாகிகள்.அந்த வகையில் இந்து அதிரடிப்படை என்ற பெயரில் உள்ள ஒரு அமைப்பின் பொதுச் செயலாளர் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் ராஜகுரு என்பவர் ஆடிய நாடகம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராஜகுரு (31). இந்து அதிரடிப்படை மாநில பொது செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 1-ம் தேதி இரவு 4 பேர் தன்னை கொலை செய்வதற்காக கத்தியுடன் துரத்தி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து தப்பி ஓடியபோது அந்த கும்பல் தன்னுடைய ஸ்கூட்டரை தீ வைத்து எரித்து விட்டதாகவும் கோபி போலீசாரிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இரவு நேரத்தில் இவர் கிளப்பிய பரபரப்பால் அந்தப் பகுதியே பதட்டமடைந்தது. இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போதுதான் உண்மை தெரிய வந்தது. அதாவது ராஜகுருவை யாரும் துரத்தி வரவில்லை. அவரே தனது ஸ்கூட்டரை தீவைத்து எரித்து விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதையடுத்து ராஜகுருவை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. சிவகுமார் கூறுகையில்,சம்பவத்தன்று ராஜகுரு ஸ்கூட்டரை எரித்துவிட்டு, எரிந்து கொண்டிருந்த ஸ்கூட்டரை அவரது செல்போனில் படம் பிடித்துள்ளார். அவரை மர்ம ஆசாமிகள் துரத்திய போது வாய்க்காலில் குதித்து தப்பி ஓடியதாக போலீசாரிடம் கூறியிருந்தார். உடனடியாக அங்கு வந்த போலீசார், அவரது செல்போனை சோதனை செய்தபோது ஸ்கூட்டர் எரிந்து கொண்டிருப்பதை 20 நிமிடங்கள் வரை படம் பிடித்திருப்பது தெரியவந்தது என்றார்.
எப்படியெல்லம் பிட்டைப் போட்டு விளம்பரம் தேடுகிறார்கள் பாருங்கள்!