ஜெ.67வது பிறந்தநாள்: கோ தானம் ... 67 லட்சம் மரக்கன்றுகள்- 696 சிவ ஆலயங்களில் வில்வமரங்கள்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அறநிலையத்துறைக்குட்பட்ட 969 சிவன் கோயில்களில் வில்வ மர கன்றுகள் நடப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்தார். இதைதொடர்ந்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க, அவரது 67வது பிறந்தநாளை முன்னிட்.டு கோயில் களில் பூஜை, பரிகாரங்கள் செய்யப்பட்டன. தங்கத் தேர் இழுக்கப்பட்டன. ஏழை எளியவர்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டன.
தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் 113 ஜோடிகளுக்கு வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம் 72 வகை சீர்வரிசைகள் கொடுத்தார். அத்துடன் பசுவும் கன்றும் வழங்கி திருமணம் செய்து வைத்தாராம்.
வைத்திலிங்கம் ரகசியமாக ஏற்பாடு செய்வதைக் கேள்விப்பட்ட அமைச்சர் காமராஜும் தன் பங்குக்கு திருவாரூரில் 104 ஜோடிகளுக்கான சீர்வரிசைகளுடன் பசுவும் கன்றும் கொடுத்து தன்னுடைய விசுவாசத்தை காண்பித்தார்.
கோ தானம் - பரிகாரம்
ஜெயலலிதாவிற்கு 2016-ம் ஆண்டு சனி புத்தி முடிந்து, புதன் புத்தி ஆரம்பமாகிறது அம்மாவுக்கு. புதனின் வாகனங்களில் ஒன்று பசு. இதைத் தானமாகக் கொடுத்தால், வரவிருக்கும் துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். ஜெ.யின் ஜாதகத்தில் 9-ம் இடமாகிய பதவி ஸ்தானத்தில் புதன் அமர்கிற காரணத்தால், ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆவதற்கு இப்போதில் இருந்தே பரிகாரத்தை முறையாகச் செய்ய ஆரம்பித்துவிட்டார்களாம்.
வழக்குகளில் ஜெயிக்க
அதன் ஒரு கட்டமாகவே, திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசைகளுடன் கோதானம் கொடுக்கின்றனர். நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜெயிப்பது உள்ளிட்ட பல அம்சங்களுக்கு இந்தப் பரிகாரம் உதவும் என்கின்றனர்.
தமிழகம் முழுவதும் தானம்
இதனையடுத்து நாடு முழுக்க மாடு தேடும் படலம் நடக்கிறது. மார்ச் மாதத்தில் பெங்களூரு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முழுமையாக முடிந்து தீர்ப்பு வந்துவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதுவரை இந்தப் பசு தானம் நாடு முழுவதும் தொடரும் என்கின்றனர்.
969 வில்வ மரங்கள்
கோ தானம் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருவான்மியூர் கோவிலில் தொடங்கி வைத்து வில்வ மரக்கன்றை நட்டார். சிவன் கோயில்களில் 969 வில்வ மரங்கள் நடும் விழா இந்து அறநிலையத்துறை நடைபெற்றது.
அமைச்சர்களும் வில்வமரமும்
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர். விசுவநாதன் மற்றும் அதிகாரிகள் வில்வமரக் கன்றுகளை நட்டனர். சென்னை சைதாப்பேட்டை காரனீஸ்வரர் கோயிலில், வீட்டு வசதித்துறை அமைச்சர் திரு. ஆர் வைத்திலிங்கம் - மயிலாப்பூர் அருள்மிகு அப்பர்சுவாமி திருக்கோயிலில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி - நுங்கம்பாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயிலில் சமூகநலத்துறை அமைச்சர் திருமதி பா. வளர்மதி - திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரர் ஆலயத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. P. பழனியப்பன் ஆகியோர் வில்வ மரக்கன்றுகளை நட்டனர். வில்வமரம் நடும் விழாவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரம்மாண்ட திட்டம்
67 லட்சம் மரக்கன்றுகள் நடும் பிரம்மாண்டத் திட்டப் பணி இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் ஆலம், அரசம், பாதாம், புன்னை, மகிழம், சிவகுண்டலம், பூவரசு, பாறை, நாவல், வில்வம் உள்ளிட்ட வறட்சியைத் தாங்கக்கூடிய பல்வேறு மரக்கன்றுகள் நடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சக்தி தரும் வில்வமரம்
இந்து மதத்தில் வில்வ மரம் புனிதமானது. முக்கூறுகளை கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. இது இக்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்பதை குறிக்கின்றது. எனவே, இதனை காலம் காலமாக கோயில்களில் வைத்து வளர்க்கப்பட்டு வருகிறது. இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்ய பயன்படுகிறது. எனவேதான் சிவ ஆலயங்களில் நடுவதற்கு இந்த வில்வ மரத்தைத் தேர்வு செய்ததிலும் ஆன்மிக அரசியல் ஒளிந்திருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன.
அஸ்வமேதயாகம்
ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கிற சட்ட வெப்பத்தைக் குளிர்விப்பதற்கும் வழக்கில் இருந்து விடுபடுவதற்கும் கிரியா, ஞானசக்தி பெறுவதற்கும்தான் வில்வ மரத்தை ஓ.பன்னீர்செல்வம் நட்டார். வில்வ மரத்தை வளர்த்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். இழந்த பதவியைப் பெறுவதற்கும் எதிரிகளை அழிப்பதற்கும் மன்னர் காலத்தில் நடப்பதுதான் அஸ்வமேத யாகம்' என்று சொல்கிறார்கள்.
ஜெ.யின் வில்பவர்
வில்வம் என்றாலே 'வில் பவர்' என்று சொல்லலாம்! உலகத்து ஜீவராசிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வில்வ மரம் உண்டாக்கும் வலிமை உடையது. அதனால்தான், அனைத்து சிவன் கோயில்களிலும் ஸ்தல விருட்சமாக வில்வ மரம் காணப்படும். ராஜகிரகமான சூரியன் அரசியலுக்கு உடையது. ஜெயலலிதா பிறந்த போது, அவரது ஜாதகத்தில் 9ம் இடம் பதவி ஸ்தானத்தில் சூரியன் அமர்ந்துள்ளது. சூரியனின் அம்சம் சிவபெருமான். அவருக்கு பிடித்த மரம் வில்வம். அதை கன்றாக நட்டு வைத்தால், சிவபெருமானின் பார்வையில் நல்லதே நடக்குமாம்.
சரியாக கவனிக்காவிட்டால்
நட்டுவைத்த வில்வமரம் வளர்ந்து விருட்சமாகும் பட்சத்தில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையும் வளரும். ஜெயலலிதாவைப் பற்றி தவறான எண்ணம் உடையவர்கள் இந்த வில்வ மரத்தைத் தாண்டிப் போகும்போது மனமாற்றம் கொள்வார்கள். வில்வத்துக்கு இயற்கையாகவே அந்த குணம் உண்டு. இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்! நீர் ஊற்றி, சரியாக வில்வ மரக்கன்றைப் பராமரிப்பது மிக மிக முக்கியம். எங்காவது அதைச் சரியாகப் பராமரிக்காவிட்டால், சங்கடங்கள் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் சோதிடர்கள்.