தடையை மீறி ஆம்பூருக்கு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது
விழுப்புரம்: தடையை மீறி ஆம்பூருக்கு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது(26) என்பவரை பள்ளிக்கொண்டா போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட அவர் திடீர் என உயிர் இழந்தார். இதை கண்டித்து ஆம்பூரில் முஸ்லீம்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
வாகனங்களுக்கு, டாஸ்மாக் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. கலவரத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்த வேலூர் எஸ்.பி.செந்தில்குமாரி உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் 2 ஐ.ஜி., 7 டி.எஸ்.பி., 12 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் ஆம்பூரில் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் வெடித்ததை அடுத்து முக்கிய தலைவர்கள் ஆம்பூர் செல்ல போலீசார் தடை விதித்தனர்.
இந்த சூழலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் விழுப்புரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து ஆம்பூர் செல்ல முயன்றார் என்று கூறப்படுகிறது. தடையை மீறி ஆம்பூர் செல்ல முயன்ற சம்பத்தை திருக்கோவிலூரில் போலீசார் கைது செய்தனர்.