நாச்சியார் பட "கோவில்" வசனம்... ஜோதிகா, பாலாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போர்க்கொடி!
நாச்சியார் படத்தில் கோவிலை அவமதிக்கும் வகையிலான சர்ச்சை வசனம் இடம்பெற்றுள்ளதாக இந்து மக்கள் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.
Recommended Video
சென்னை : பாலாவின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா கோவில்கள் குறித்து சர்ச்சையான வசனத்தை பேசியுள்ளதாக இந்து மக்கள் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது வழக்கு பதிய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
பாலாவின் இயக்கத்தில் உருவான நாச்சியார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிட்ட போதே சர்ச்சையில் சிக்கியது.
காவல்துறை அதிகாரியாக வரும் ஜோதிகா டீசரில் கெட்ட வார்த்தை பேசுவது ஹைலைட்டாக காட்டப்பட்டிருந்தது. தமிழ் படத்தில் இப்படி ஒரு கெட்ட வார்த்தை காட்டப்பட வேண்டுமா, ஏன் அந்த வார்த்தை பீப் செய்யப்படவில்லை என்று பல்வேறு கேள்விகள் அப்போதே எழுந்தன.
இந்துமக்கள் கட்சி புகார் மனு
நாச்சியார் என்பது வீரவரலாற்று மங்கையின் பெயர் என்பதால் நாச்சியாரில் ஜோதிகா போலீஸாக நடிக்கும் இந்த படம் பெரிய அளவில் எதிர்ப்பார்க்கப்பட்டது. இன்று நாச்சியார் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியின் தமிழகப் பிரிவினர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
கோயிலை அவமதிக்கும் வசனம்
அதில் நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் பேசும் வசனத்தில் 'கோயிலா இருந்தாலும் குப்பை மேடா இருந்தாலும் எங்களுக்கு ஒன்று தான்' என்று இடம்பெற்றுள்ளது.
புண்படுத்தும் நோக்கத்துடன்
இந்து ஆலயங்களை அவமதிக்கும் விதமாகவும், இந்து மதத்தை புண்படுத்தும் விதமாகவும் இந்த வசனம் இடம்பெற்றுள்ளது. ஜோதிகா பேசும் வசனம் மூலம் அவர்களின் நோக்கம் தெள்ளத் தெளிவாகிறது.
நாச்சியார் படத்தை தடை செய்ய வேண்டும்
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த நடிகை ஜோதிகா மதகலவரத்தை தூண்டும் எண்ணத்தில் இந்த வசனத்தை பேசியுள்ளார். எனவே சர்ச்சைக்குரிய வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும் நாச்சியார் படத்தை தடை செய்ய வேண்டும்.
நடவடிக்கை தேவை
இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் அர்ஜூன்சம்பத் ஆணையின் படி இந்த வசனத்திற்கு காரணமான இயக்குனர் பாலா மற்றும் நடிகை ஜோதிகா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் கோயில் கட்டும் இடத்தில் மருத்துவமனை கட்டலாம் என்ற வசனத்திற்கு தடை கேட்டு பாஜகவின் எச். ராஜா போர்க்கொடி பிடித்தது போல தற்போது நாச்சியார் படத்திற்கு புதிய பிரச்னை கிளம்பியுள்ளது.