தன் வீடு மீதே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி.. காரணம் இதுதான்
இந்து மக்கள் கட்சி நிர்வாகி போலீஸ் பாதுகாப்புக்காக தன் வீடு மீதே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியது தெரியவந்துள்ளது.
சிவகங்கை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக, சிவகங்கை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் தன் வீடு மீதே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியிருப்பது தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள புலியூரைச் சேர்ந்தவர் பாலமுருகன்(32). இவர் இந்து மக்கள் கட்சியில் மண்டல தலைவராக உள்ளார். அதே போல, இவருடைய தம்பி ஆனந்த வேலு(30) இவர் இந்து மக்கள் கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளார்.
பாலமுருகன் வீட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் என இரண்டு முறை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
இந்த குண்டு வீச்சு தொடர்பாக திருப்புவனம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
போலீஸாரின் விசாரணையில், பாலமுருகன் தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அவரே தனது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு வேறு யாரோ தன்னைக் கொல்ல பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர் என்று நாடகமாடியது தெரியவந்தது. பாலமுருகனின் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு நாடகத்துக்கு அவருடைய தம்பி ஆனந்தவேலு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, பாலமுருகன், அவருடைய மனைவி அழகு சாரதி, தம்பி ஆனந்தவேலு, பாலமுருகனின் டிரைவர் புலியூரைச் சேர்ந்த முருகன், கார்த்தி, தினேஷ், மதுரையைச் சேர்ந்த விஜய் ஆகியோர் மீது திருப்புவனம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், இதில் தொடர்புடைய முருகன் கார்த்தி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், பாலமுருகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது எரிந்து நாசமான பைக் தென்காசியைச் சேர்ந்த பெருமாள் என்பவருடையது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த பைக்கை பாலமுருகனின் டிரைவர் முருகன் திருடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.