காவிரி விவகாரத்தில் கருத்து கூறாத ரஜினிக்கு உப்பு பாக்கெட் பார்சல்.. இந்து மக்கள் கட்சி முடிவு!
சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்களைப் பார்த்து தமிழக நடிகர்கள் பலரும் கருத்து கூறி வருகின்றனர். கமல்ஹாசனும் தன்னுடைய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து விட்டார். ஆனால் காவிரி விவகாரத்தில் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காத நடிகர் ரஜினி காந்த்துக்கு இந்து மக்கள் கட்சி ரயில்வே பார்சல் மூலம் உப்பு அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தினமும் 12,000 கன அடிவீதம் வரும் 20ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. தமிழக டிரைவர்கள் அடித்து அவமானப்படுத்தப்பட்டன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். ஆனால், இந்த விஷயத்தில் இதுவரை நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை எதையும் தெரிவிக்கவில்லை.
ரஜினியின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசுகள் கொடுத்த தமிழர்களுக்காக ஒரு சிறு ஆறுதல் வார்த்தைகளைக் கூட ரஜினி கூறவில்லை.
இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு இந்து மக்கள் கட்சியினர் உப்பு பாக்கெட்டுகளை அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த உப்பு பாக்கெட்டுகளை ரயில்வே பார்சல் மூலம் அனுப்பி இருப்பதாக அந்தக் கட்சியினர் தெரிவித்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.