நீதிபதி தீபக் மிஸ்ரா மனைவிக்கு அல்வா, பூ அனுப்ப முயன்ற 7 பேர் கைது
தீபக் மிஸ்ரா மனைவிக்கு அல்வா, பூ பார்சல் அனுப்ப முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்: உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அல்வா, மல்லிகை பூ பார்சல் அனுப்ப முயன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் என கூறப்படுகிறது.
'திருமணமான ஆண் மற்றும் பெண் தகாத உறவு வைத்துக் கொண்டால் தவறில்லை' என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பினை வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பினை வழங்கியது நீதிபதி தீபக் மிஸ்ரா ஆவார்.
இந்து மக்கள் கட்சி
இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்தே பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மேலும் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்களும் நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்து மக்கள் கட்சி சார்பாகவும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கள்ள உறவு தவறில்லை
விழுப்புரம் மாவட்டத்தில் இக்கட்சி நிர்வாகிகள் சிலர் தலைமை தபால் அலுவலகம் முன்பு போராடுவதற்காக நேற்று திரண்டனர். இதற்கு அக்கட்சியின் மாநில அமைப்பு குழு தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். அவர்களின் கையில் மல்லிகை பூ, மற்றும் அல்வா இருந்தது. அதனை கள்ள உறவு தவறில்லை என்று கூறிய நீதிபதி தீபக் மிஸ்ராவின் மனைவிக்கு அனுப்ப போவதாக கூறினர்.
'திருமதி தீபக் மிஸ்ரா'
பூ, அல்வா-வை தீபக் மிஸ்ராவின் டெல்லியில் உள்ள வீட்டு முகவரிக்கு அனுப்பவும் அதனை பார்சல் செய்தனர். பின்னர் 'திருமதி தீபக் மிஸ்ரா' என எழுதப்பட்ட தபால் கவருக்குள் இதனை வைத்தனர்.
பார்சல் பறிமுதல்
கடைசியாக அந்த பார்சலை கொரியர் அனுப்ப போஸ்ட் ஆபீஸ் உள்ளே போனார்கள். ஆனால் அதற்குள் தகவலறிந்து வந்த டவுன் போலீசார் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் 7 பேர் உள்ளிட்டோரை கைது செய்தனர். பார்சலும் பறிமுதல் செய்யப்பட்டது. நீதிபதி மனைவிக்கே இப்படி பூ, பார்சல் அனுப்ப முயன்றதால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது.