'சோ' உடலைப் பார்த்து கதறி அழுத ராம கோபாலன்
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு ராம கோபாலன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: பத்திரிகையாளர் சோ ராமசாமி மறைவிற்கு இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது சோவின் உடலைப் பார்த்து கதறி அழுதார்.
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ ராமசாமி இன்று அதிகாலையில் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்து முன்னணியின் மூத்தத் தலைவர் ராம கோபாலன், சோவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, "அவரை நான் அடிக்கடி பார்த்து பேசுவேன். பெரிய ஜீனியஸ், மனிதாபிமானி, தேசாபிமாணி. எந்த துறையைப் பற்றி பேசினாலும், தெரிந்து கொண்டுதான் பேசுவார். தெரியாமல் பேசமாட்டார். அவருடை இழப்பு ஈடு செய்ய முடியாது. அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராம கோபாலன் கூறினார்.
ராம கோபாலன் சோவின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அவரால் இரங்கல் செய்தியைக் கூட சொல்ல முடியவில்லை. தொடர்ந்து கதறி அழுதவாறே ராம கோபாலன் அங்கிருந்து சென்றார்.