இந்து முன்னணி சசிகுமார் கொலை வழக்கில் ஆயுதங்களைத் தேடும் சி.பி.சி.ஐ.டி போலீஸார்
இந்து முண்ணனி பிரமுகர் கொலை வழக்கில் ஆயுதங்களை கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி தேடுதல்
கோவை : கடந்த ஆண்டு கொல்லப்பட்ட இந்து முண்ணனி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் ஆயுதங்களைக் கண்டுபிடிக்க சி.பி.சி.ஐ.டி போலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி கோவையில் இந்து முண்ணனி பிரமுகர் சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். இவர் இந்து முண்ணனியின் செய்தி தொடர்பாளராக இருந்தவர். இதுதொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் சையது அபுதாஹிர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சதாம் என்பவரைக் கைது செய்தனர். இதனையடுத்து தலைமறைவாக இருந்த சுபேர் என்கிற குற்றவாளியைக் கடந்த வாரம் கேரளாவில் கைது செய்தனர்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சுபேரை விசாரிக்க ஏழு நாள் சி.பி.சி.ஐ.டி.,க்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், விசாரணை முடிந்து நேற்று நீதிமன்றத்தில் சுபேர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கொலைக்கான ஆயுதங்கள் எதுவும் மீட்கப்படாத நிலையில், முக்கியத் தகவல்கள் மட்டுமே கிடைத்த்தாகப் போலீஸார் பதிலளித்தனர்.
சசிகுமாரை கொலை செய்துவிட்டு ஆயுதங்களை உக்கடம் பகுதியில் வீசியதாகக் கொலையாளிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் அந்தப் பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டையை துவக்கி இருக்கிறார்கள். இன்று உக்கடம் கழிவுநீர்ப் பண்ணைப் பகுதியில் பொக்லைன் உதவியுடன் ஆயுதங்களைத் தேடிவருகின்றனர்.