இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை.. கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு.. பதற்றம் !
கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தனர், கடைகளையும் அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவையில் நேற்று இரவு இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் காலை முதலே கோவையில் பதற்றம் நிலவி வந்தது.
இன்று அதிகாலை முதல் நகரின் அனைத்து பகுதிகளிலும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் அரசு, தனியார் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டு, கண்ணாடி உடைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து காலை முதல் மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. கிராமப்பகுதிகளுக்கு மட்டும் மினி பஸ் உள்பட ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன.
கோவை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கோவை, திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டது.
இந்நிலையில் சசிகுமார் இறுதி ஊர்வலம் துடியலூர் வழியாக சென்றது. அப்போது அந்த வழியில் திறந்து இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள் மீது கற்களை வீசினர். 10 இருசக்ர வாகனம், பஸ் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீஸ் வாகனத்திற்கும் தீ வைத்தனர்.
இதனையடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டது. 2 வஜ்ரா வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தது. மேலும், கூடுதல் போலீசார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இச்சம்பவத்தினால் அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.