ஜல்லிக்கட்டுக்காக... சென்னையில் சாணிக் குளியல் போட்ட இந்து மக்கள் கட்சியினர்!
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தக்கோரி சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்கள் சாணிக் குளியல் போட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி சாணிக்குளியல் போட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் எழுச்சிப் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. நாளை மறுநாள் பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க மறுத்துள்ளது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை எந்த தடையும் இன்றி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை ஜல்லிக்கட்டு விவகராத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து அவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரிபவனை முற்றுகையிட்டனர்.
அப்போது இந்துமக்கள் கட்சி நிர்வாகி ராம ரவிகுமார் தலைமையில் அவர்கள் சாணிக் குளியல் போட்டு மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்து மக்கள் கட்சியினரின் இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.