கோவிலில் வைத்து கொடூரமாக சிதைக்கப்பட்ட காஷ்மீர் சிறுமி..!
ஒரு சமூக மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்காக இந்துத்வா கும்பல் 8 வயது சிறுமியை சீரழித்து கொன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முஸ்லிம் நாடோடி மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுவதற்காக வெறியர்கள் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து சீரழித்து கொன்றுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 8 வயது சிறுமியை கோவிலில் அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்ததன் மூலம் இவர்களின் மத புனிதமும் கூட கேலிக்கூத்தாகியுள்ளது.
ஒரு பாடும் பறவையாக இமயமலைப் பகுதியில் குதிரை மேய்த்துக் கொண்டு பனி படர்ந்த புல்தரையில் ஓடி ஆடி மகிழ்ந்த 8 வயது முஸ்லிம் சிறுமி. ஜம்முவில் இருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தில் இந்தச் சிறுமியின் குடும்பம் வசிக்கிறது. இவர்கள் குர்ஜாரர் வகுப்பைச் சேர்ந்த முஸ்லீம் பழங்குடியினர். மத தீவிரவாதம், முஸ்லிம் மக்களை சுற்றி நடக்கும் மத தாக்குதல்கள் என்னவென்று தெரியாமல் மகிழ்ச்சியோடு நாட்களை கடத்திவந்தவர் சிறுமி.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த பிஞ்சு மலரை கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி கசக்கி தூக்கி எறிந்துள்ளனர் இந்தக் கயவர்கள். காட்டிற்கு குதிரை மேய்க்க சென்ற சிறுமி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை, அவர் அழைத்து சென்ற குதிரை மட்டும் வீடு திரும்பியது.
ஏதோ விபரீதம் என்பதை உணர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரைத் தேடி காட்டிற்குள் சென்றுள்ளனர். ஆனால் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளித்த போதும் அவர்கள் சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை. அதற்கான காரணம் கொடூரமானது.
3 நாட்கள் சித்ரவதை செய்யப்பட்ட சிறுமி
சிறுமியை ஓய்வுபெற்ற அரசு அலுவலரான 60 வயது சாஞ்சி ராம், போலீஸ் அதிகாரிகள் சுரேந்தர் வர்மா, ஆனந்த் தத்தா, திலக் ராஜ் மற்றும் கஜூரியா ஆகியோர் உதவியோடு கோவில் ஒன்றில் அடைத்து வைத்து வன்புணர்வு செய்துள்ளனர். 3 நாட்களுக்கும் மேலாக சிறுமியை கட்டிப்போட்டு வைத்து அவளுக்கு உணவு எதுவும் கொடுக்காமல் மயக்க மருந்து கொடுத்து அந்த காட்டுமிராண்டிகள் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளன.
சிறுமியை சிதைத்த காட்டுமிராண்டிகள்
சாப்பாடு கொடுக்காமல் மயக்க மருந்து கொடுத்து மயக்கத்திலேயே வைத்திருந்ததோடு தங்களின் வெறியை சிறுமி மீது காட்டியதில் அவளுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடத்தப்பட்ட 6 நாட்களுக்குப் பிறகு சிறுமியின் உடல் காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர் சாஞ்சி ராம் மற்றும் காவல் அதிகாரிகள் மட்டுமின்றி சாஞ்சிராமின் மகன் விஷால், இளைய வயதினரான அவரது சகோதரி மகன் ஆகியோரும் சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தினரை அச்சுறுத்த
சிறுமி சார்ந்த முஸ்லிம் நாடோடி சமூகத்தை அச்சுறுத்தி ஜம்முவை விட்டு வெளியேற வைக்கவேண்டும் என்பதற்காக இந்த வன்புணர்வு மற்றும் கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொது நிலங்களிலும், காடுகளிலும் கால்நடைகளை மேய்க்கும் முஸ்லிம் நாடோடிகளின் நடவடிக்கையால் சமீப காலமாக அங்கு வசிக்கும் மற்ற சமூகத்தினருக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆனால் ஒரு இனத்தை ஒடுக்குவதற்காக 8 வயது சிறுமியை சிதைத்து கொன்றுள்ளதை எப்படி நியாயப்படுத்த முடியும் என்பதே அனைவரின் கேள்வி.
கடுமையான தண்டனை வேண்டும்
எந்த மதமுமே ஒரு உயிரைக் கொல்வதை நியாயப்படுத்தவில்லை அப்படி இருக்கையில் எந்த பாவமும் அறியாத சிறுமியை சிதைத்து உருக்குலைத்து போட்டுள்ளவர்களை வெளியில் நடமாட விடலாமா. இதனை உணராமல் அவர்களுக்கு சட்டரீதியில் தண்டனை வழங்கப்படும் என்று இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகிறது, இது போன்ற வெறியர்களால் இன்னும் எத்தனை பிஞ்சுகளின் உயிர் நசுங்கப் போகிறதோ என்ற விபரீதத்தை அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போது உணர்வார்கள்.