அரசியல் சாசனத்துக்கு அப்பாலான சக்தி தமிழக அரசை நடத்த கூடாது: 'இந்து' ராம் வலியுறுத்தல் #jayalalithaa
சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழக அரசை வழிநடத்த மாற்று ஏற்பாடு அவசியம் என்று மூத்த பத்திரிகையாளர் 'இந்து' என். ராம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிபிசி தமிழோசை வானொலிக்கு 'இந்து' என். ராம் அளித்த பேட்டி:
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வந்திருக்க வேண்டும். முதலில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் எந்தவித தகவலும் இல்லை. காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து என தவறான தகவல்களைத்தான் கூறினார்கள்.
ஆனால் தற்போதைய மருத்துவ அறிக்கைகளில் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. முதலமைச்சரும் மெல்ல மெல்ல குணமாகிவருகிறார் என்பதும் தெரிகிறது. முதல்வர் கிரிட்டிக்கல் கேரில் இருந்தாலும் குணமாகி வருவது தெரிகிறது. இதை முதலிலேயே சொல்லியிருக்கனும்.
செயல்படாத அரசாங்கம்
அரசாங்கத்தைப் பொறுத்தவரை செயல்படவே இல்லை. அதிகாரிகள்தான் அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்கள் தங்களது பணிகளை செய்வது இல்லை.
இயங்க முடியாத அமைச்சர்கள்
அமைச்சர்களைப் பொறுத்தவரை பணிகளை செய்யக் கூடாது என்ற நோக்கம் எதுவும் இல்லை... அவர்களால் செய்ய முடியாத சூழ்நிலை இருக்கிறது. அமைச்சர்களுக்கு முடிவெடுக்கும் தைரியம் எதுவும் இல்லை. அனைத்து அதிகாரங்களும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடு தேவை
அரசாங்கத்தை நடத்த முடியாத நிலையில் நிச்சயமாக ஒரு மாற்று ஏற்பாடு தேவை. இதனால்தான் ஆளுநர் நடவடிக்கை எடுத்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன. அவரும் கூட முழு நேர ஆளுநரும் இல்லை. அவர் மகாராஷ்டிராவின் ஆளுநர்.
அதிகாரிகள் அல்ல...
அரசியல் சாசனப்படி பிரதமரோ அல்லது முதல்வரோ செயல்பட முடியாத நிலையில் இருக்கும்போது மாற்று ஏற்பாடுகள் அவசியம்; தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிரதமரோ முதல்வரோ ஒரு அரசாங்கத்தை வழிநடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் தேவை. தலைமைச் செயலரோ உள்துறை செயலரோ அரசாங்கத்தை நடத்த கூடாது.
எம்ஜிஆர், அண்ணா காலத்தில்...
அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்ட சக்திகள் அரசாங்கத்தை நடத்தக் கூடாது. அன்று எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்றபோது அப்போதைய ஆளுநர் சரியான நடவடிக்கை எடுத்தார். அதற்கு முன்னர் அண்ணாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது நெடுஞ்செழியன் அரசாங்கத்துக்கு தலைமை வகித்தார். இன்றைக்கும் அதேபோன்ற நிலைமை தேவை.
இவ்வாறு இந்து ராம் கூறியுள்ளார்.