அன்று கனகசபை..இன்று கணக்கு ஆய்வு..சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை அட்டாக்
சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய ஒத்துழைப்பு அளிக்கும்படி தீட்சிதர்களுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிதம்பரம்: நடராஜர் கோயில் சட்டவிதிகளின்படி நிர்வாகிக்கப்படுகிறதா என்பது குறித்து அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு வரும் ஜூன் 7,8ஆம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளருக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது சிதம்பரம் நடராஜர் கோயில். நடராஜரின் பொற்சபையாகவும் திகழ்கிறது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகள் தொடர்பாக துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த விசாரணைக்கு அங்கு உள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆணையருடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது தொன்று தொட்டு வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை ஏறி தேவாரம், திருவாசகம் பாடிய சிவனடியார்கள்.. தீட்சிதர்கள் கெடுபிடி
கனகசபை தரிசனம்
அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து நடராஜர் கோயிலில் பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர். ஏற்கெனவே கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பக்தர்களோடு சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.
ஜனாதிபதி, பிரதமருக்குக் கடிதம்
தீட்சிதர்கள் வெறுப்புப் பிரச்சாரத்தை முன்னின்று நடத்தும் குழுக்களின் போராட்டங்களின் விளைவாக அவர்களின் வாழ்க்கை வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறை, தமிழக ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
கோவில் நிர்வாகம்
அந்தக் கடிதத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி பொது தீட்சிதர் கோவிலை நிர்வகித்து வருவதாகவும், கோயில் நிர்வாகம் மற்றும் மத உரிமைகள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை அரசியலமைப்பின் 26 வது பிரிவின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன எனவும், அனைத்து மதங்களின் செயல்பாடுகள் கடமைகள் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் பழங்காலத்திலிருந்தே கோயில் பாரம்பரிய பழக்கவழக்கங்களின் படி சமய பிரிவை சேர்ந்த பொது தீட்சிதர்களால் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு வழக்கு ஆய்வு
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சபையின் செயலாளருக்கு அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு 7,8ம் தேதிகளில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அரசாணை பிறப்பித்ததற்கே சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். இந்த நிலையில் அடுத்ததாக அறநிலையத்துறை சார்பில் ஆய்வு செய்யப்படும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதற்கு என்ன மாதிரியான எதிர்வினையாற்றப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.