மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் காலி செய்ய நோட்டீஸ்... நாளை காலை வரை கெடு
மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீவிபத்தை அடுத்து அங்குள்ள 115 கடைகளையும் காலி செய்ய கோரி தமிழக அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.
மதுரை: தூங்காநகரமான மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் கடந்த வாரம் தீவிபத்து நடைபெற்றதை அடுத்து அங்குள்ள 115 கடைகளையும் காலி செய்ய கோரி கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடந்த வாரம் ஒரு கடையில் தீவிபத்து நடைபெற்றது. இந்த தீ மளமளவென மற்ற கடைகளுக்கும் பரவியது. இதில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் நாசமாகின.
கிழக்கு கோபுரம் அருகே வீர வசந்த மண்டபம் அருகே நடைபெற்ற இந்த தீவிபத்தில் அங்கு மாடத்தில் இருந்த புறாக்கள் கருகின. இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்தனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோயில் வளாகத்தில் இரவு கடையை மூடும் போது ஒருவர் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெரிந்தது. இந்நிலையில் அந்த கடை உரிமையாளர் முருகபாண்டியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள 115 கடைகளையும் நாளை காலைக்குள் காலி செய்ய கோயில் இணை ஆணையர் நாகராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடை உரிமையாளர்கள் நல சங்க தலைவர் ராஜநாகலு, மாற்று இடம் கொடுத்த பின்னர் கடைகளை காலி செய்ய சொல்ல வேண்டும். இந்த நோட்டீஸால் 500 பேரின் வாழ்வாதாரம் பாதிக்கும். கோயிலில் மாற்று மதத்தினர் யாரும் கடை வைத்திருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.