கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் திருப்பம்.. கேரளாவில் சாமியார் கைது!
ஜெயலலிதா ஓய்வெடுத்த கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை வழக்கு தொடர்பாக கேரள மாநில சாமியார் ஒருவரைக் கைது செய்து கோத்தகிரியில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கிய கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24ம் தேதி கொலையும் கொள்ளையும் ஒருசேர நடந்து தமிழகத்தில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இது தொடர்பாக பலர் கைதாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் சாமியார் மனோஜ் போலீசார் பிடியில் சிக்கியிருக்கிறார். அவரிடம் கோத்தகிரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இவர் கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக இருந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.ஆனால் மனோஜுக்கும் பின்னாலும் யார் உள்ளனர் என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில்,11 பேர் ஈடுபட்டனர் என்று கூறும் போலீசார் இதுவரை 9 பேரைக்கைது செய்துள்ளது.மீதி 2 பேரில் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்.இன்னொருவர் சாலைவிபத்தில் சிக்கி படுகாயத்துடன் தப்பி,மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
வாளையாறு மனோஜ்
கேரள மாநிலம், வாளையாறு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் கொடநாடு எஸ்டேட் மற்றும் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் வீட்டிற்கும் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்தார். இதைகூறி பல அதிமுக பிரமுகர்களை கவர்ந்துள்ளார்.இதனால் அவர் கொடநாடு சென்று வருவதில் சிக்கல் இல்லாமல் இருந்துள்ளது. இதைப்பயன்படுத்தி இந்த கொள்ளையில் அவரும் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
பாயுமா போலீஸ் விசாரணை
கைதானவர்கள் மட்டும்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்று முடிவெடுக்க போலீசார் திணறுவதாகவும்,விரைவில் கொங்கு மண்டல அதிமுக புள்ளிகள் சிலரையும் போலீஸ் விசாரிக்க உள்ளனர் என்றும் தெரிகிறது.
பயத்தில் சசிகலா உறவுகள்
சசிகலாவும் சிறையில் இருக்கிறார்.இப்போது தினகரனும் திகார் சிறைக்குப் போய்விட்டார்.அவர்களின் சார்பில் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியும் அடிக்கடி மன்னார்குடி உறவுகள் பேச்சைக் கேட்கமாட்டேன் என்கிறார்.இந்த நிலையில் நாம் எல்லாம் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பதைப்போல இருக்கிறோம்.அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லையே என்ற பயத்தில் சசிகலா உறவுகள் இருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.