மொகரம் பண்டிகை: இந்துக்கள் கொண்டாடிய தீமிதி திருவிழா
மானாமதுரை: மொகரம் திருநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான இந்துக்கள் பங்கேற்றனர்.
மானாமதுரையை அடுத்த முதுவன்திடல் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வந்தனர். இஸ்லாமியர்களும் இந்துக்களும் ஒற்றுமைகயாக வசித்து வந்தனர். காலப்போக்கில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக முஸ்லிம்கள் வெளியேறிவிட்டனர்.
இஸ்லாமியர்கள் வசித்து வந்த போது அவர்களுக்கு பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் கிராமத்தின் மையத்தில் இருந்தது. கிராமத்தில் நடைபெறும் பிறப்பு, இறப்பு, விவசாயம் உள்ளிட்ட எல்லாவற்றிற்கும் முதலில் பள்ளிவாசலில் வைத்து வணங்குவது கிராமத்தினரின் வழக்கம்.
தீய சக்திகளை எதிர்த்து முகமது நபி போரிட்டபோது, அவருக்கு ஆதரவாக இந்த கிராமத்தை சேர்ந்த பாத்திமா நாச்சியார் தனது 2 மகன்களுடன் போரிட்டதாகவும், அதில் மரணம் அடைந்ததாகவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
நாளடைவில் பள்ளி வாசல் சேதமடைந்துவிட்டது. ஆனாலும் இந்துக்கள் பள்ளிவாசலை புதுப்பித்துள்ளனர். இங்கு முஸ்லிம் மாதப்பிறப்பான மொகரம் திருநாளை தீமிதி திருவிழாவாக கடைபிடிக்கின்றனர்.
பூக்குழி திருவிழா
மொகரத்திற்கு பத்து நாட்கள் முன்பு பள்ளிவாசலில் காப்பு கட்டி விரதமிருந்தனர். 10-வது நாளான இன்று அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தர்கா முன்பு பிரமாண்ட பூக்குழி அமைக்கப்பட்டது. நேர்த்திக்கடனுக்காக பக்தர்கள் விறகு போட்டு இருந்தனர்.
அதிகாலை 2 மணிக்குமேல் தீ மூட்டி பூ வளர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காப்புகட்டிய பக்தர்கள் சுமார் 4 மணி அளவில் அருகில் உள்ள குளத்திற்கு சென்று குளித்துவிட்டு கிராம மேளதாளத்துடன் பூக்குழி இறங்கினர்.
நேர்த்திக்கடன்
பெண்கள் தனியாக விரதமிருந்து தீமிதி கங்குகளை தங்கள் தலையில் அள்ளிப் போட்டு கொண்டனர். இவ்வாறு செய்வதால் தங்களை நோய் நொடி அண்டாது என்பது இவர்களின் நம்பிக்கை.
கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கூறுகையில் மொகரம் நாளன்று விரதமிருந்து நேர்த்திகடன் செலுத்துவது வழக்கம், இந்தாண்டும் நாங்கள் வழக்கம் போல விரதமிருந்து நேர்த்திகடன் செலுத்தியுள்ளோம் என்றார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தியவர்களுக்கு சர்க்கரை, பானக்கரம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
குழந்தை வரம்
பின்னர் பாத்திமா நாச்சியார் நினைவாக அலங் கரிக்கப்பட்ட சப்பரத்தை ஊர் எல்லை வரை தூக்கி சென்று திரும்பி வந்து தர்காவில் வைத்தனர். இந்த விழா முழுக்க, முழுக்க இந்துக்களால் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த பகுதி மக்கள் எந்த விவசாயம் செய்தாலும் முதலில் பாத்திமா நாச்சி யாருக்குதான் படைப்பார்கள்.
மேலும் திருமணம் நடைபெற, குழந்தை வரம் வேண்டுபவர்கள் நேர்த்திக் கடனுக்காக பூக்குழிக்கு விறகு செலுத்துவார்கள் என இந்த பகுதியினர் தெரிவித்தனர்.
மொகரம் பண்டிகை
நாளைதான் மொகரம் கடைபிடிக்கப்படுகிறது ஆனால் முதுவன்திடலில் இன்றே மொகரம் கடைபிடிக்கப்பட்டதற்கு கிராமத்தினர் நாங்கள் பத்துநாட்கள் கணக்கு வைத்து விரதம் இருக்கிறோம் , பத்தாம் நாள் விரதத்தை முடிக்க வேண்டும், நாங்கள் இன்றே கடைபிடிக்கிறோம் என்றனர்.