ஓசூர்: மொகரம் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி- 4 மாவட்ட போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி: மொகரம் பண்டிகையை முன்னிட்டு ஓசூரை அடுத்துள்ள கெலமங்கலத்தில் நடந்த ஊர்வலத்தில் கல்வீச்சு நடந்தது. இதனைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதால் 4 மாவட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையின்போது முஸ்லிம் அமைப்பினர் ஊர்வலம் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கெலமங்கலம் மசூதியில் தொடங்கிய ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் தேன்கனிக்கோட்டை - கெலமங்கலம் சாலை, சுல்தான்பேட்டை வழியாக சென்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து முடிய வேண்டும். ஆனால் பட்டாளம்மன் கோவில் தெருவிற்குள் செல்ல முயன்றது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு கல்வீச்சு சம்பவமும் நடந்தது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்து கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
தொடர்ந்து எஸ்பிக்கள் கண்ணம்மாள் (கிருஷ்ணகிரி), லோகநாதன் (தருமபுரி) ஆகியோர் தலைமையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கெலமங்கலத்தில் உள்ள அனைத்து வீதிகளிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர் பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.