கழகங்கள் இல்லா தமிழகம்... சீமானையும் வளைக்க துடிக்கும் இந்துத்துவா சக்திகள்- சிக்குவாரா?
கழகங்கள் இல்லா தமிழகம் என்ற தங்களது இலக்கில் நாம் தமிழர் கட்சியின் சீமானையும் வளைக்க துடிக்கின்றன இந்துத்துவா சக்திகள்.
சென்னை: தமிழர் அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாள மீட்டெடுப்பு முழக்கங்களை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை 'இந்துத்துவாவாதி' என முத்திரை குத்தி தங்கள் பக்கம் இழுக்கத் துடிக்கிறது இந்துத்துவா சக்திகள்.
தந்தை பெரியாரின் பேரன்... பிரபாகரனின் தம்பி... மார்க்ஸின் மாணவன்... இதுதான் தொடக்க கால அரசியல் மேடைகளில் சீமான் தம்மைப் பற்றி பிரகடனம் செய்து கொண்டது. திராவிடர் இயக்க மேடைகளில் தொடக்க காலங்களில் பகுத்தறிவு பிரசாரம் செய்தார் சீமான்.
இறைநம்பிக்கை பாதை
திராவிட அரசியல் கட்சிகளின் மீதான வெறுப்பால் திராவிடர் இயக்கங்களையும் சாடத் தொடங்கினார். பின்னர் காலப்போக்கில் திராவிடர்களே தமிழர்களுக்கு எதிரி என்கிற அடிப்படையிலான பிரசாரத்தை கையிலெடுத்து தமிழர் பண்பாட்டு மீட்பு என இறைநம்பிக்கை பக்கம் பாதையை திருப்பினார் சீமான்.
தலைகீழாக முயற்சி
திராவிட அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக தமிழர் வாழ்வுரிமையை பேசும் அரசியலை முன்வைத்து வருகிறார் சீமான். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலமாக இந்துத்துவா சக்திகள் காலூன்றுவதற்கு தலைகீழாக நின்று முயற்சிக்கின்றன.
காலூன்ற முடியலை
இந்துத்துவா கொள்கைகளைக் கண்ட இயக்கங்கள், கட்சிகள் பல்வேறு பெயர்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மும்முரமாக இயங்குகின்றன. ஆனால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாஜகவால் இம்மியளவும் காலூன்ற முடியாமல் இருக்கிறது.
கழகங்கள் இல்லாத தமிழகம்
இதனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அதிமுக இரண்டாக பிளவுபடுத்தி ஒரு அணியினரை தம்வசப்படுத்தி வைத்திருக்கிறது பாஜக. இடைத் தேர்தலில் திமுக வெல்வதை விரும்பாத பாஜக இப்போது தேர்தலையே ரத்து செய்துள்ளது. கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற புதிய கொள்கை முழக்கத்தை முன்வைக்கிறது பாஜக.
சீமானுக்கு குறி
கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற கொள்கை முழக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் யாரெல்லாம் திராவிட அரசியல் கட்சிகளை வெறுக்கிறார்களோ அவர்களையெல்லாம் தங்களது தோழமை சக்திகளாக அடையாளப்படுத்திக் கொண்டு வளைத்துப் போட துடிக்கிறது பாஜக. இந்துத்துவா கோஷ்டிகளின் இந்த பகீரத முயற்சிகளில் ஒரு கட்டமாகத்தான் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு இந்துத்துவா முத்திரை குத்தி வளைத்துப் போட பார்க்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.