வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீர்யானைக்கு ஆண் குட்டி பிறந்தது... தாயும், சேயும் நலம்!
சென்னை: சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் பிரகதி (வயது 8) என்ற பெண் நீர்யானை, வாம்பூரி (வயது 15) என்ற ஆண் நீர்யானையுடன் இணை சேர்ந்து அழகிய ஆண் குட்டி ஒன்றை 20.10.2014 அன்று ஈன்றது.
வண்டலூர் பூங்காவில், மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நீர் யானை குட்டி பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த குட்டியுடன் சேர்த்து பூங்காவிலுள்ள நீர்யானைகளின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
ஆற்றுக் குதிரை
‘ஆற்றுக்குதிரை' என்று அழைக்கப்படும் நீர்யானை, ஒரு காலத்தில் ஐரோப்பா, ஆப்ரிக்கா கண்டங்களில் பரந்து காணப்பட்டது. வாழ்விட அழிப்பு, வேட்டை போன்ற காரணங்களால் பல நாடுகளில் அழிந்துவிட்ட இவ்வுயிரினம் தற்போது காங்கோ குடியரசு, உகாண்டா, டான்சானியா, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான், காம்பியா மற்றும் தென் ஆஃப்ரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.
பார்ப்பதற்குப் பன்றி போல
பார்ப்பதற்கு பன்றி போல் காணப்பட்டாலும், நீர்யானைகளின் நெருங்கிய உறவினர்கள் திமிங்கலம், டால்பின் போன்ற கடல் வாழ் இனங்களாகும். இவைகள் நீர்நில வாழ் பொது மூதாதையிரிடமிருந்து 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரு கிளைகளாக தோன்றிய உயிரினங்களாகும்.
மூன்றாவது பெரிய உயரினம்
நிலவாழ் உயிரினங்களில், யானை மற்றும் காண்டாமிருகத்திற்கு அடுத்து மூன்றாவது பெரிய உயிரினம நீர்யானை ஆகும். குதிக்கத் தெரியாத உயிரினமான நீர் யானை நிலத்தில், மணிக்கு 30 கி.மீ வேகத்தில் ஒடவும், நீரில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நீந்தவும் செய்யும்.
பகலில் நீரில்.. இரவில் நீர் நிலையோரங்களில்
பகல் முழுவதும் நீரில் கழித்து, இரவு வேளையில் நீர்நிலை ஒரங்களில் புற்களை மேயும். ஆண் நீர்யானை 7½ வயதிலும், பெண் நீர்யானை 3 அல்லது 4 வயதிலும் பருவ வயதினை எட்டும்.
எல்லாமே நீருக்கு அடியில்தான்
இனச்சேர்க்கை, குட்டி ஈனுதல் மற்றும் குட்டி பால் குடித்தல் அனைத்தும் நீருக்கு அடியிலேயே நடைபெறும். எட்டு மாத கர்ப்ப காலத்தை கொண்ட பெண் நீர்யானை, தனது குட்டிகளை ஒரு வருடம் வரை தன்னுடன் வைத்து பராமரிக்கும். நீர்யானைகள் சாணங்களை பெரும்பாலும் நீர் நிலைகளில் மட்டுமே சிதறடித்துக் கழிக்கும். இச்சாணங்கள் திலேப்பியா மீன் போன்ற பல நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு ஆதாரமாக விளங்குகிறது. இதனால் நீர்யானைகள் அழியும் போது, உணவுச்சங்கிலி உடைபட்டு பல்வேறு உயிரினங்கள் அழிந்து போகும் ஆபத்து உள்ளது.
நீர்ச்சாணம்
பூங்காவில் நீர் யானை பராமரிக்ப்படும் தொட்டிகளிலேயே நீர்யானை சாணங்களை கழிப்பதால் ஒவ்வொரு வாரமும் நீர் மாற்ற வேண்டியுள்ளது. மாற்றப்படும் நீரை வீணாக்காமல் சுமார் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் பராமரிக்கப்படும் புல் தோட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீர் வீணாக்கப்படாமல் மறு சுழற்சி செய்யப்படுகிறது. மற்ற புல் தோட்ட புற்களை விட, இப்புல் தோட்டத்தில் விளையும் புற்களையே நீர்யானை விரும்பி சாப்பிடுகிறது என்பதை பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்களை வண்டலூர் பூங்காவின் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (மற்றும்) இயக்குநர் தெரிவித்துள்ளார்.