காவிரி பிரச்சினையில் காழ்ப்புணர்ச்சி காட்டுவோர்களை சரித்திரம் அடையாளம் காட்டும்- ஸ்டாலின் #DMK
காவிரி பிரச்சினையில் ஆக்கபூர்வமான நோக்கத்தை நிறைவேற்ற இங்கே சிலர் யோசிக்கிறார்கள் என்றால், அவர்களைச் சரித்திரம் அடையாளம் காட்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை : போற்றுபவர் போற்றினாலும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றினாலும், நமக்கேற்ற கருத்தை இங்கே கூடியிருக்கும் நாம், உள்ளத்தில் ஒளியோடும் வாக்கினில் உண்மையோடும் எடுத்துரைப்போம்; காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் நாம் அனைவரும் எப்போதும் இணைந்தே போராட இங்கே சூளுரை மேற்கொள்வோம் திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் திமுக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பங்கேற்கவில்லை. காலை 10.30 மணியளவில் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கூட்டம் தொடங்கியது. காங்கிரஸ், தமாகா, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் பங்கேற்றன. திருநாவுக்கரசர், ஜி.கே.வாசன், கீ.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றனர்.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றவர்களை வரவேற்று பேசிய ஸ்டாலின், காழ்ப்புணர்ச்சியால் பலரும் திமுகவை விமர்சனம் செய்வதாக குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், எங்களுடைய இந்த முயற்சி - இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வெற்றிகரமாக நடந்து விடக்கூடாது என்று ஊடகத் துறையிலே ஒரு சிலரும், வேறு துறையிலே உள்ள ஒரு சிலரும் ஆசையும் ஆர்வமும் காட்டியிருப்பதாக புகார் கூறினார். அவர்களுக்குக் காவிரிப் பிரச்சினையை விட - விவசாயப் பெருமக்களின் உயிராதாரத்தை விட - தி.மு.கழகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சிதான் மிகுதியாகும் என்பதை அனைவரும் அறிவர். 'வாழ்க வசவாளர்கள்' என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதைப் போல, காவிரிப் பிரச்சினையிலும் காழ்ப்புணர்ச்சி காட்டுவோர்க்கு, கழகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கவும், உச்ச நீதிமன்றத்தின் கட்டளைகளை மறுதலிக்கவும், நீதி - நியாயம் - சட்ட நெறிமுறைகளைப் புறக்கணிக்கவும், கருத்து வேறுபாடு - கட்சி மாறுபாடு மறந்து அனைத்துக் கட்சிகளும் கர்நாடகத்திலே ஒரே நோக்கில் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். ஆனால், நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நடக்கவும், உச்ச நீதிமனறத்தின் கட்டளைகளை ஏற்கவும், நீதி - நியாயம் - சட்ட நெறிமுறைகளின்படி நடக்கவும், ஒற்றுமையோடு ஒன்றிணைவதில் ஒரு சிலருக்கு மனக்கசப்பு. எதிர்மறையான எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள அங்கே அனைவரும் ஒன்று சேருகிறார்கள். ஆக்கபூர்வமான நோக்கத்தை நிறைவேற்ற இங்கே சிலர் யோசிக்கிறார்கள் என்றால், அவர்களைச் சரித்திரம் அடையாளம் காட்டும் என்றும் கூறினார் ஸ்டாலின்.
போற்றுபவர் போற்றினாலும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றினாலும், நமக்கேற்ற கருத்தை இங்கே கூடியிருக்கும் நாம், உள்ளத்தில் ஒளியோடும் வாக்கினில் உண்மையோடும் எடுத்துரைப்போம்; காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் நாம் அனைவரும் எப்போதும் இணைந்தே போராட இங்கே சூளுரை மேற்கொள்வோம்! இன்று வராதவர்களும் நாளை நம்மோடு வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.