கூலிப்படை வைத்தும் கொலை செய்வாள் பத்தினி... இப்படி புது மொழி வந்து விடும் போலயே!
சென்னை: கொலையும் செய்வாள் பத்தினி என்பது பழமொழி... ஆனால் கூலிப்படை வைத்து கணவனை கொலை செய்வாள் மனைவி என்ற புதுமொழி உருவாகி விடும் போல இருக்கிறது. அந்த அளவிற்கு தப்போது கணவனை கொலை செய்யும் மனைவிகள் அதிகரித்து வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
கோடம்பாக்கம் வக்கீல் முருகனை கள்ளக்காதலன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையை வைத்து கொலை செய்தார் அவரது மனைவி. இப்போது முருகனின் மனைவியும், அவரது கள்ளக்காதலனும் சிறையில் உள்ளனர். இந்த சம்பவத்தின் வடு மறையும் முன்னதாக சென்னையில் மீண்டும் அதே போல ஒரு கொலை முயற்சி சம்பவம் அரங்கேறி அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. சுவாதி கொலை பரபரப்பினால் இந்த கொலை முயற்சி சற்றே அமுங்கித்தான் போனது. ஆனால் தன்னை கொல்ல முயற்சி செய்தவர்கள் யார் என்று இரவு பகலாக துப்பறிந்து கண்டுபிடித்துள்ளார் சரவணன் என்ற பொறியாளர்.
துபாயில் இருந்து வரும் போது விமானத்தில் சிரித்து பேசியபடியே வந்த மனைவியே தன்னை கூலிப்படை மூலம் கொல்ல திட்டமிட்டதை கண்டறிந்த சரவணன், சொத்துப்பிரச்சினையில் கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்த மனைவியையும், அவரது மாமனார், மாமியாரையும் சிறைக்கு அனுப்ப இப்போது போராடி வருகிறார்.
துப்பறியும் நிபுணர்
கொளத்தூர் விநாயகபுரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் சரவணன்,39. இவருக்கு திருமணமாகி ராதிகா,35 என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். சரவணன் துபாயில் கம்ப்யூட்டர் என்ஜீனியர். அங்கேயே தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றில் நிபுணராக பணிபுரிந்து வந்தார்.
கொலை முயற்சி
விடுமுறையில் சென்னை வந்துள்ள சரவணன் கடந்த ஜூன் 23ம் தேதி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, தனது பெற்றோருக்கு சிகிச்சை முடித்துவிட்டு வந்த போது கீழ்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்த போது 3 பேர் கும்பல் சரவணனை அரிவாளால் வெட்டியது.
சுவாதி கொலையில் பிசி
பலத்த காயமடைந்த சரவணன் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொலை முயற்சி குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி வெட்டி கொலை செய்யப்படவே, சென்னை போலீஸ் அதில் பிசியாகிவிட்டனர்.
கையில் எடுத்த சரவணன்
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சரவணன், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தானே விசாரணையில் இறங்கினார். முதற்கட்டமாக, தாக்குதல் நடத்தப்பட்டபோது அருகில் உள்ள டவர் லோகேஷன், கொலை முயற்சியை நேரில் பார்த்தவர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அனைத்தையும் சேகரித்து துப்பு துலக்க ஆரம்பித்தார்.
சிக்கிய ஆதாரம்
தாக்குதல் நடந்த 23ம் தேதி பாரமவுண்ட் ஹோட்டலில் வெட்டப்பட்ட நேரம் தொடங்கி வீடு வரை தன்னை பின் தொடர்ந்தவர்கள் யார் என்று சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை எடுத்து போலீஸ் கொடுத்தார் சரவணன்.
மொபைல் போன் சிக்னல்
சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 12 மணிமுதல் 2.30 மணிவரை தான் பயணித்த ஏரியாக்களில் பதிவான செல்போன் எண்களை சந்தேகத்திற்கு உரிய எண்களை பரிசோதனை செய்து பார்த்த போது, அதில் 4 எண்கள் தன்னை பின் தொடர்ந்து பயணித்ததை கண்டறிந்தார் சரவணன். அந்த நம்பர்களில் இருந்து தனது குடும்பத்தினருக்கு பேசியிருந்தனர்.
அதிமுக பிரமுகர்
ஒருவர் அதிமுக பிரமுகர் கண்ணன் என்பதும், மற்ற 3பேர் கூலிப்படையினர் என்பதும் தெரியவரவே, போலீசில் தெரிவித்தார் சரவணன். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டவே, முதற்கட்டமாக, கூலிப்படையாக வந்த வாலாஜாபாத் வெங்கடேசன், அரும்பாக்கம் செந்தில்குமார், அம்பத்தூர் அருணகிரி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னணி என்ன?
3 பேர் கைதாக கண்ணன் தலைமறைவானார். பின்னணியை விசாரிக்க ஆரம்பித்தார் சரவணன். தன்னுடைய மாமியாரும், மனைவின் அத்தை அமுதாவும் இணைந்து கூலிப்படையினருக்கு ரூ. 1 லட்சம் கொடுத்ததை கண்டு பிடித்தார் சரவணன்.
ஃபேஸ்புக் சாட்டிங்
சரவணனின் மனைவி ராதிகாவும், கண்ணனும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள். இந்த நட்பு திருமணமான பின்னரும் தொடர்ந்தது. ஃபேஸ்புக்கில் இருவரும் சாட்டிங் செய்து வந்தது தெரியவரவே அதிர்ச்சியில் உறைந்து போனார் சரவணன்.
ராணி மாதிரி வைத்திருந்தேன்
திருமணமாகி 14 ஆண்டுகளில் போகாத நாடு இல்லை. ராணி போல வைத்திருந்தேன். செலவிற்கு மட்டும் மாதம் ரூ. 1 லட்சம் கொடுத்தேன். துபாயில் இருந்து விமானத்தில் வரும் போது கூட சிரித்துக் கொண்டேதான் வந்த அவள், இப்படி கொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்வாள் என்று கனவில் கூட நினைக்கவில்லை என்கிறார் சரவணன்.
கணக்கு கேட்டதில் தகராறு
ஆண்டுதோறும் வாங்கிக் கொடுத்த நகைகளும், மாத மாதம் கொடுத்த பணமும் என்ன ஆனது என்று கணக்கு கேட்டதில் தனக்கும் தன் மனைவி ராதிகாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கூறும் சரவணன், இதற்காக கொலை செய்யும் அளவிற்கு செல்வார் என்று தான் நினைக்கவில்லை என்கிறார்.
முன்ஜாமீன் பெற்ற 3 பேர்
சரவணனின் மனைவி ராதிகா, மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். இவர்களின் முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட் படி ஏறி உள்ளார் சரவணன். சொத்துப்பிரச்சினை, சொந்தப்பிரச்சினைக்கு எல்லாம் கொலை செய்ய கட்டிய மனைவியே கூலிப்படையை ஏற்பாடு செய்தால் என்ன சொல்வது? குடும்பத்தில் இருப்பவர்களே கிரிமினல்களாக மாறினார் யாரை நொந்து கொள்வது?