போலி சான்றிதழ்: படித்தது 1ம் வகுப்பு... பார்த்தது ஹெட்மாஸ்டர் வேலை... அடடே அருள் சுந்தரம்...
கிருஷ்ணகிரி: 1 ம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியராக பணிக்கு சேர்ந்ததோடு, தலைமை ஆசியராகவும் பதவி உயர்வு பெற்றுள்ள சம்பவம் கல்வி அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது. தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்த அந்த போலி ஆசிரியர் தற்போது தலைமறைவாகிவிட்டார்.
முன்பெல்லாம் போலி டாக்டர்கள் கைது என்ற செய்திதான் வரும். அவர்களாவது சித்தா, ஹோமியோபதி படித்துவிட்டு டாக்டர் வேலை பார்ப்பார்கள். ஆனால் 1ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8 வகுப்பு மட்டுமே படித்தவர்கள் கூட பட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் வேலையில் சேர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது.
தற்போது தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் போலி சான்றிதழ் மூலம் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்த நபர்கள் வரிசையாக சிக்கி வருகின்றனர். கிருஷ்ணகிரியில் 1ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் பணியில் சேர்ந்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்,42. இவர் போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பிளஸ் 2 வரை படித்த, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன்,37 என்பவருக்கு இவர் போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன் மூலம் முனியப்பன் அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துள்ளார்.
இதுபோல போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், 37 என்பவரும் போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். இதையடுத்து தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ராஜேந்திரன், முனியப்பனையும், கிருஷ்ணகிரி போலீஸார் செந்தில்குமாரையும் கைது செய்தனர்.
போலி ஆசிரியர் விவகாரம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிக்குத் தொடர் விடுமுறை எடுத்த ஆசிரியர்கள் குறித்த விவரத்தை குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சந்தேகத்துக்கு உரியவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
தலைமை ஆசிரியர் அருள்சுந்தரம்
கிருஷ்ணகிரி மாவட் டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கங்கோஜி கொத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் அருள்சுந்தரம், 42 என்பவர், போலி கல்விச்சான்றுகள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து வேப்பனப்பள்ளி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
படித்தது 1ம் வகுப்பு
விசாரணையில், அருள்சுந்தரம் காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சப்பன் என்பவரது மகன் ராஜா என்பவதும், இவர் கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ராஜா என்ற பெயரில் கடந்த 31-07-1978-ல் 1ம் வகுப்பு சேர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தலைமறைவு
இதனைத் தொடர்ந்து அருள்சுந்தரம் என்கிற ராஜாவை, புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்த நேற்று செவ்வாய்கிழமை நேரில் ஆஜராகுமாறு, அதிகாரிகள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், பள்ளிக்கு வராமல், செல்போனை நிறுத்திவைத்து விட்டு தலைமறைவாகிவிட்டார்.
15 ஆண்டுகளாக பணி
கடந்த 25-08-2001-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போலி கல்விச்சான்றிதழ்கள் மற்றும் சாதிச்சான்றிதழ் சமர்பித்துள்ளார். 29-08-2001 முதல், வேப்பனப்பள்ளி ஒன்றியம் பி.கே.பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக, அருள்சுந்தரம் என்கிற பெயரில் பணிபுரிந்துள்ளார்.
சாதி சான்றிதழ்
மேலும், ஆதிதிராவிடர் என சாதிச்சான்றிதழ் பெறப்பட்டு பணிவாய்ப்பு பெறப்பட்டுள்ளது. 1ம் வகுப்பு சேர்ந்து மேற்கொண்டு படிக்கவில்லை பணிமூப்பு அடிப்படையில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார் என விசாரணையில் தெரிய வரவே , போலி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபு, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.