இந்து முன்னணி பிரமுகர் கொலை: முதல்வருக்கு ராம.கோபாலன் வேண்டுகோள்!
இது தொடர்பாக இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''புதன்கிழமை நேற்று (18.6.2014) இரவு சுமார் 9.30 மணி அளவில் அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ் என்கிற பாடி சுரேஷ் சமூக விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் வெள்ளையப்பன் படுகொலை நடந்து ஒரு வருடம் இன்னமும் முடியவில்லை. கொலையாளிகள் கைது செய்யப்பட்டாலும், கொலைக்கு உடந்தையானவர்கள், கொலையாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் எல்லாம் வெளியில்தான் இருக்கிறார்கள் என்பதை இந்தக் கொலையின் மூலம் தமிழக அரசுக்கு பகிரங்கப்படுத்தி இருக்கிறார்கள்.
21 ஆண்டுகளாகத் தேடப்பட்ட குற்றவாளியை பிடித்த உடன் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு தமிழகத்தின் காவல் துறை செயல்பாடு இருப்பதை கண்டு தமிழக மக்கள் அஞ்சுகிறார்கள்.
தமிழக முதல்வர், இக்கொலை வழக்கை நேரடியான கவனத்தில் கொண்டு குற்றவாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
பாடி சுரேஷ் நல்ல மனிதர், எல்லோருக்கும் உதவும் பண்பாளர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சமுதாயப் பணியில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு பெரும் பங்காற்றியவர். அவரது இழப்பு சமுதாயத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், உற்றார் உறவினர்களுக்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
அன்னாரது ஆன்மா நற்கதி அடைய எல்லா ஊர்களிலும் திருக்கோயில் கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்ய இந்து முன்னணி பொறுப்பாளர்களையும், பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.