ஜாதிகள் இல்லையடி பாப்பா.. அர்ஜூன் சம்பத்தைப் பார்த்திருந்தால் பாரதி பாடியிருக்க மாட்டார்!
சென்னை: இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், இன்று முகநூலில் பதிவிட்டுள்ள செய்திக் குறிப்பு மனித உரிமை ஆர்வலர்களிடையே பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ' கொங்கு சமூகத்து மக்களிடையே பெரும் புயலைக் கிளப்பிய மாதொரு பாகன் நூலின் ஆங்கில பதிப்பு, சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டது. அந்த விருதை ரத்து செய்து விட்டோம்' எனப் "ஜாதிப் பெருமையோடு" விவரித்திருக்கிறார்.
அர்ஜுன் சம்பத்தின் முகநூல் பதிவு இதோ!
மாதொருபாகன் ஆங்கில பதிப்பு (One Part Woman) புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருதை ரத்து செய்ய. கடந்த நான்கு நாட்களாக டெல்லியில் முகாமிட்டு கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிடம் பேசி வெற்றி வாகை சூடித்தந்த
கங்கப்பா (திருச்செங்கோடு பகுதியின் துணை ஆட்சியராகப் பணியாற்றியர், வேலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு ஆட்சியராக இருந்தவர், எம்.ஜி.ஆர் முதல்வராக இருக்கும்போது தலைமை செயலகத்தில் சிறப்பாக பணியாற்றியவர், தமிழகத்தில் நக்ஸல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்) அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விரிவான செயல்திட்டங்களையும் முக்கியமான ஆலோசனைகளையும் வழங்கியவர்களுக்கும் நன்றிகள்.
புத்தகத்தை தடை செய்ய எங்களோடு சேர்த்து போராடியவர்கள்...
1. டி.எம். காளியண்ண கவுண்டர் ( இந்திய அரசியல் சட்ட சபை உறுப்பினர், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ) திருச்செங்கோடு.
2. ஆரம்ப கட்டம் முதல் வழக்கை நடத்தி வரும் சொக்கலிங்கம்.
3. வழக்கு தொடுத்த கிரிவல பாதை நல சங்கம் - ஆர்.எஸ்.எஸ். மகாலிங்கம் (ஒருங்கிணைப்பாளர்).
4. குமார ரவிக்குமார் (கொங்கு இளைஞர் பேரவை தமிழ்நாடு)
5. ஜி.கே.நாகராஜ் (கொங்குநாடு ஜனநாயக கட்சி)
6.Er.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)
7. ராம கோபாலன் (இந்து முண்ணனி)
8. அர்ஜுன் சம்பத் (இந்து மக்கள் கட்சி)
9. ராமதாஸ் (பாட்டாளி மக்கள் கட்சி) என 35 பேருக்கு நன்றியைத் தெரிவித்து இருக்கிறார்.
இறுதியாக, ' நம்முடைய கலாசாரத்தைக் கெடுக்க நினைக்கும் பன்னாட்டு சக்திகளின் முற்போக்கு இயக்கங்களை தடுத்து நிறுத்தி, எழுத்து உரிமை என்ற பெயரில் மக்களின் நம்பிக்கையையும் கலாசார பண்பாட்டையும் பெண்களின் மனம் புண்படும் விதமாக எழுதுவோர் மீதும் அதை ஆதரித்து செயல்படும் இயக்கங்களையும் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேண்டுகோள் வைத்திருக்கிறார் இந்த அர்ஜூன் சம்பத்.
மதவாதமோ, ஜாதிய வாதமோ இரண்டுமே சமூகத்தை சீர்குலைத்து அழித்து விடும். இதில் அர்ஜூன் சம்பத் இரண்டையும் சேர்த்துக் கூட்டிக் கொண்டு திரிகிறார். என்னாகப் போகிறதோ!