மது விருந்து... கோவை ஸ்டார் ஹோட்டலுகு பூட்டுப் போட முயற்சி... 6 பேர் கைது
கோவை: ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டம், நடனம், பார்ட்டி, மது விருந்து ஆகியவற்றைக் கண்டித்து கோவையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்குப் பூட்டுப் போட்டு மூடும் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
2014 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ளது. இதையொட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு முழுவதும் ஹோட்டல்கள், ரிசார்ட்கள் உள்ளிட்ட இடங்களில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், மது விருந்து அமர்க்களப்பட்டது.
ஆண்டுதோறும் இந்த விருந்து கொண்டாட்டங்கள் உச்சஸ்தாயியை எட்டி வருகின்றன. இந்த நிலையில், இத்தகைய கொண்டாட்டங்கள் தை 1-ஆம் தேதியான தமிழர் தினம், சித்திரை திருநாளான தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை அவமதிக்கும் செயலாகும் என்று கூறி, புத்தாண்டு கொண்டாட்டங்களை கண்டித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் காலனி பிரபு தலைமையில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது.
பிரபு தலைமையில் 6 பேர் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலுக்கு பூட்டு போட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.