சென்னை ”ஸ்கைவாக்”கில் வெடிகுண்டு மிரட்டலால் பீதி- பொதுமக்கள் வெளியேற்றம்!
சென்னை: சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள வணிக வளாகமான "ஸ்கைவாக்"கில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பினால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பீதியை ஏற்படுத்தியது.
அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஸ்கைவாக் வணிக வளாகம் உள்ளது. 6 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் 7 சினிமா தியேட்டர்கள் உள்ளன. உணவகங்கள், வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள், துணிக்கடைகள், பொழுது போக்கு மையங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில், இன்று முற்பகல் 11.40 மணி அளவில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மபோன் ஒன்று வந்தது. அதில் பேசியவர், ‘‘ஸ்கைவாக் வணிக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது எந்த நேரத்திலும் வெடிக்கும்'' என்று தெரிவித்துவிட்டு போனை வைத்து விட்டார்.
இதுகுறித்து உடனடியாக அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு சென்றனர். ஒவ்வொரு மாடியாக சோதனை நடைபெற்றது. அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
அங்கு வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே நின்றனர். தகவல் அறிந்ததும் ஏராளமானோர் ஸ்கைவாக் கட்டிடம் முன்பு கூடி நின்றனர். இதுவரையில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.