ஒகேனக்கல் பரிசல் விபத்துக்கு காரணம் ‘செல்பி’தான்… விசாரணையில் அதிர்ச்சி
தர்மபுரி: ஒகேனக்கல் பரிசல் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்திற்கு செல்பி மோகம் காரணம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. பரிசலில் இருந்தவர்களில் ஒருவர், தனது செல்போனில் அருவி அருகே, 'செல்பி' எடுக்க, பரிசலின் ஓரத்திற்கு சென்றபோது அது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை, தி.நகர், உஸ்மான் சாலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவரது மகள் கோமதியின் திருமண நாளினை கொண்டாடுவதற்காக குடும்பத்தினருடன் ஞாயிறன்று, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார்.
கிருஷ்ணமூர்த்தி, அவரது மருமகன் ராஜேஸ், மகள் கோமதி உட்பட ஒன்பது பேரும், ஒகேனக்கல் பரிசல் துறையில் இருந்து, கஜா முருகேசன் என்பவரின் பரிசலில், தொம்பச்சி பாறை அருகே பயணம் சென்றனர். அப்போது, திடீரென பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரிசல் ஓட்டி உட்பட, 10 பேரும் நீரில் மூழ்கினர்.
5 உடல்கள் மீட்பு
நீச்சல் தெரிந்த பரிசல் ஓட்டி கஜா முருகன், கோமதி, ராஜேஷ், இவர்களது மகன் சச்சின் ஆகிய மூவரை உயிருடன் மீட்டார்; மற்ற ஆறு பேரும் நீரில் மூழ்கினர். நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களை 40 பரிசல்கள், 400க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டிகள் உதவியுடன், தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தேடியதில் ஞாயிறன்று 2 உடல்களும் திங்கட்கிழமையன்று கிருஷ்ணமூர்த்தி, கோகிலா, ரஞ்சித் ஆகிய மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. குழந்தை சுதிஷாவும் பலியாகியிருக்கலாம் என்பதால் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரேத பரிசோதனை
மீட்கப்பட்டவர்களின் உடல்கள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், நேற்று மதியம் முதல், கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு அதிக பாரம் ஏற்றிச்சென்றதே காரணம் என்று கூறப்பட்டது. பயணிகளின் மரணத்திற்கு லைப்ஜாக்கெட் அணியாததும், காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதிக பாரம்
பரிசல் கவிழ்ந்து, ஆறு பேர் இறந்ததற்கு, நிர்ணயிக்கப்பட்ட, ஐந்து பேருக்கு மேல் பயணம் செய்தது முக்கிய காரணம் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் கூறியுள்ளார். பரிசலில் பயணம் செய்தவர்கள், 'லைப் ஜாக்கெட்' அணியாமல் சென்றதும், தண்ணீரில் மூழ்கி இறப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது.இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்த பரிசல் ஓட்டி உள்ளிட்டோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
எமனான செல்பி மோகம்
இதற்கிடையே பரிசல் கவிழ்ந்ததற்கு செல்பி மோகம் காரணமாக அமைந்ததாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பரிசலில் இருந்தவர்களில் ஒருவர், தனது செல்போனில் அருவி அருகே, 'செல்பி' எடுக்க, பரிசலின் ஓரத்திற்கு சென்றபோது அது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எச்சரிக்கும் விபத்து
இப்போது அனைத்து வயதினரையும், செல்பி மோகம், பீடித்துள்ளது. ஆபத்தான இடங்களில் கூட, செல்பி எடுத்து, கடைசியில் உயிரை இழக்கின்றனர். நீர் வீழ்ச்சி அருகே, செல்பி எடுக்கும்போது, சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. தற்போது, செல்பி காரணமாக, ஆறு பேர் உயிரிழக்க நேரிட்டுள்ளது.