காவிரியில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு- மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
சேலம்: கர்நாடக அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஓகேனக்கல் அருவில் தண்ணீர் கொட்டுகிறது. மேட்டூர் அணை நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தாலும் தண்ணீர் கொட்டுவதை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
விநாடிக்கு 10000 கடி அடி நீர்
கர்நாடக அணைகளான கபினியில் இருந்து வினாடிக்கு 6,000 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 4,037 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது நாளாக கர்நாடக அணைகளில் இருந்து 10,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பரிசல் இயக்கத் தடை
ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருந்தது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசலில் செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஒரே நாளில் இரு மடங்காக உயர்ந்து, வினாடிக்கு 5,800 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் ஒன்றே கால் அடி உயர்ந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
ஆடிப்பெருக்கு தண்ணீர்
ஆடி மாதம் 18ஆம் நாள் ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர ஊர்களிலும், காவிரி ஆறு பாயும் ஊர்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவிற்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் மட்டுமே தமிழகத்தில் காவிரி ஆறு பாய்ந்தோடும். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆறு பொங்கி வர வேண்டும் என்று இப்போதே வருணபகவானை வேண்டத் தொடங்கியுள்ளனர்.