சுற்றுலா வந்தவர்களின் நகையைத் திருடிய ஒகேனக்கல் மசாஜ் தொழிலாளர்கள்
ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருவியில் குளித்தவரின் நகையை திருடிய மசாஜ் தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளிடம் இருந்து நகையை கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
விடுமுறை தினமான நேற்று, சேலம் மாவட்டம், சூரமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது நண்பர் ஆகாஷ் ஆகியோர் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள், இருவரும் அருவியில், சுற்றுலா பயணிகளுடன் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது கழுத்தில் இருந்த, தலா ஒன்றரை பவுன் செயினை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த இருவரும், சத்தம் போட்டதில் அருகிலிருந்த சுற்றுலா பயணிகள் நகையை திருடிய இருவரை பிடித்து ஒகேனக்கல் போலீஸில் ஒப்படைத்தனர். அவர்கள் மசாஜ் தொழிலாளர்கள் என்பது தெரிய வந்தது. தகவலறிந்த பென்னாகரம் டி.எஸ்.பி மணிகண்டன் ஒகேனக்கல் ஸ்டேஷனுக்கு சென்று கைது செய்யப்பட்ட மசாஜ் தொழிலாளர்கள் இருவரிடமும் விசாரித்தார்.
விசாரணையில்அவர்கள் ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையை சேர்ந்த பாபு மற்றும் மாதேஷ் என்பது தெரிந்தது. இதையடுத்து, ஒகேனக்கல் போலீஸார் பாபு, மாதேஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.